திருச்சி விமான நிலையத்தில் இருந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மரக்கடை பகுதிக்கு இன்னும் விஜய் வராத நிலையில், அங்கு அவர் பேசுவாரா என தொண்டர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று (செப்டம்பர் 13) முதல் தனது அரசியல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்காக திருச்சி சென்றடைந்துள்ளார்.
ஆனால் காலை 9.45 மணியளவில் திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
எனினும் விமான நிலையத்தில் இருந்து விஜய் பிரத்யேக பிரச்சார பேருந்தில் புறப்பட்ட நிலையில், அதனை சூழ்ந்து நூற்றுக்கணக்கான தொண்டர்கள் வழிநெடுக செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை, ராமேஸ்வரம், காரைக்குடி செல்லும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.
காலை 10.35 மணிக்கு மரக்கடை பகுதியில் பிரச்சாரம் செய்ய போலீசார் அனுமதி வழங்கியிருந்த நிலையில், நண்பகல் 12.30 ஆகியும் நிலையில் தற்போது தான் டிவிஎஸ் டோல்கேட் பகுதியை விஜய்யின் வாகனம் நெருங்கியுள்ளது.
ஏற்கெனவே இரண்டு மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், திட்டமிட்டபடி இன்று மரக்கடை பகுதியில் விஜய் பிரச்சாரம் செய்ய காவல்துறை அனுமதி வழங்குமா என கேள்வி எழுந்துள்ளது.
மரக்கடை பகுதியில் கடந்த 6 மணி நேரத்திற்கும் மேலாக தொண்டர்கள் காத்திருக்கும் நிலையில் அவர்கள் தண்ணீர், உணவு இன்றி சிரமத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.
மேலும் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் விஜய் இன்று மேற்கொள்ள வேண்டிய பிரச்சார பயணங்கள் மேலும் தாமதம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
