மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று நேரத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கும் நிலையில், தமிழகத்துக்கான அறிவிப்புகள் இடம் பெறுமா என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த கால பட்ஜெட்டுகளில் தமிழகத்துக்கான அறிவிப்புகள் என்று தனியே எதுவும் இடம்பெறவில்லை. பீகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்தநிலையில் 2026ல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறது. எனவே இந்த ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்துக்கென தனியே அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தசூழலில் முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 1) தனது எக்ஸ் பக்கத்தில்,
“ வழக்கமாகச் சொல்லும் திருக்குறளோடு சேர்த்து, தேர்தலை மனதில் வைத்தேனும் தமிழ்நாட்டுக்கான பின்வரும் அறிவிப்புகள் இடம்பெறுமா?
விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் படிப்புக்கான 3,548 கோடி ரூபாய் கல்வி நிதி
கோவை, மதுரை மெட்ரோ இரயில்,
தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுத்தி வரும் ஜல் ஜீவன் திட்டத்துக்கான 3,112 கோடி ரூபாய் நிதி,
புதிய இரயில்வே திட்டங்கள்,
நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி ஒன்றிய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு.
இன்னும் பட்டியல் இருக்கிறது. தேர்தலை மனதில் வைத்தாவது இம்முறை தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகளைத் தவறாமல் வெளியிடுவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.
அவை மதுரை AIIMS போல அறிவிப்போடு நின்றுபோகாமல், முறையான நிதி ஒதுக்கீட்டுடன் குறித்த காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கோருகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
