வரும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் சூர்யா போட்டியிட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. இந்நிலையில் சினிமாவில் மட்டுமே சூர்யாவின் கவனம் இருக்கும் என அவரது நற்பணி இயக்கம் தெளிவுபடுத்தி உள்ளது.
இதுகுறித்து அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் இன்று (ஆகஸ்ட் 20) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கடந்த சில நாட்களாக அண்ணன் சூர்யா பற்றி சில பொய்யான தகவல்கள் இணைய ஊடகங்களில் பரவி வருகிறது.
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சூர்யா களமிறங்கப் போகிறார் என்று சமூக வலைத்தளங்களை மையமாக வைத்து இந்த பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்தச் செய்தி உண்மைக்கு மாறான போலியான தகவல் என்பது மட்டுமல்ல. சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது.
கலை உலகப் பயணமும், அகரமும் இப்போதைய அவர் வாழ்வுக்கு போதுமான நிறைவைத் தந்துள்ளது. சமீபத்தில் நடத்த அகரம் நிகழ்வு தமிழ்நாடு மட்டுமின்றி உலகு தழுவிய அளவில் கவனம் ஈர்க்கப்பட காரணமானவர்களாகிய உங்களுக்கு எங்கள் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.
அண்ணன் சூர்யாவை நேசிக்கும் கோடிக்கணக்கான தம்பி, தங்கைகள், நண்பர்களின் வாழ்த்துக்களோடு சினிமாவில் மட்டுமே அண்ணனின் கவனம் இருக்கும். எங்கள் அண்ணன் சூர்யா பற்றி வெளியான போலியான இந்த செய்தியைத் திட்டவட்டமாக மறுக்கிறோம்” என அதில் கூறப்பட்டுள்ளது.
