ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று பிப்ரவரி 24-ந் தேதி நடைபெறும் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக அவரது தோழி சசிகலா தெரிவித்துள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணிக்கு ஆதரவாக தென் மாவட்டங்களில் பிரசாரம் செய்ய விரும்புவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் சசிகலா கூறியிருந்தார். ஆனால் சசிகலாவை எந்த வகையிலும் அனுமதித்துவிடக் கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்தார். அதனால் சசிகலாவின் இந்த விருப்பத்தை எடப்பாடி பழனிசாமி கண்டுகொள்ளவில்லை;
மேலும் அதிமுக- பாஜக கூட்டணியில் தம்மிடம் சொல்லாமலேயே தமது சகோதரி மகன் டிடிவி தினகரன் இணைந்துவிட்ட கோபத்திலும் சசிகலா இருந்து வந்தார்.
இதனையடுத்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமது ஆதரவாளர்கள் போட்டியிடுவார்கள் என அறிவித்தார் சசிகலா. அத்துடன் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார்; அதே போல தஞ்சாவூருக்கும் சென்று ஆதரவாளர்களை சந்தித்தார் சசிகலா.
மேலும் ”சசிகலா தேர்தலில் தனிக்கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளார்; 30 தொகுதிகளில் தமது ஆதரவாளர்களை களமிறக்க இருக்கிறார்” என நாம் டிஜிட்டல் திண்ணையில் பதிவு செய்திருந்தோம்.
இந்நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் சசிகலா பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக நேற்று சென்னையில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார் சசிகலா. அப்போது, பசும்பொன்னில் நடைபெறும் கூட்டத்தில் நல்ல செய்தியை தெரிவிக்கிறேன் என்றார்.
இதனிடையே சென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “ ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற இருக்கிறது; அதில் நல்ல செய்தி வரும் என்றார்.
பசும்பொன் பொதுக் கூட்டத்தில், சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நாம் கூறியிருந்ததைப் போல சசிகலா தனிக் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிடுவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
