தேர்தலுக்கு பின்னர் பெட்ரோல் விலை உயருமா?

Published On:

| By admin

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயருமா என்பது குறித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கமளித்தார்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. 2020 ஆம் ஆண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது சில நாட்கள் அதிகரிக்கப்படாமல் இருந்த பெட்ரோல் டீசல் விலை பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது 100 ரூபாயை தாண்டி விற்பனையாகி வருகிறது.

ADVERTISEMENT

இந்த சூழலில் கடந்த 120 நாட்களுக்கு மேலாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகிறது. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு விலை உயர்த்தப்படவில்லை என்று பல்வேறு தரப்பினரும் கூறிவந்தனர்.

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

அதே சமயத்தில் நேற்றுடன் ஐந்து மாநில தேர்தல் நிறைவடைந்ததால் மீண்டும் பெட்ரோல் டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்த்தப்படலாம் என்று சமூக வலைதளங்களில் பலரும் பேசி வந்தனர். இதனால் #petrolprice என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டில் இருந்தது.

அதே சமயத்தில் ரஷ்யா உக்ரைன இடையே போர் நடந்து வரும் நிலையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படும் என்றும் கூறப்பட்டது.

ADVERTISEMENT

இந்த சூழலில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு தொடர்பாக பேசியுள்ள அத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, சர்வதேச சந்தையின் முடிவுகளைப் பொறுத்தே எண்ணெய் விலை தீர்மானிக்கப்படுகிறது. 5 மாநில தேர்தலைக் கருத்தில் கொண்டு எண்ணெய் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்துவதாகக் கூறுவது சரியல்ல. உக்ரைன் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் இதனை எண்ணெய் நிறுவனங்கள் கருத்தில் கொள்ளும். அதுபோன்று மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு முடிவெடுக்கும். நமது எரிசக்தி தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை மத்திய அரசு உறுதி செய்யும் என்று தெரிவித்தார்

**-பிரியா**

Photo of author
admin
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share