‘பொறுத்திருந்து பாருங்கள்’ : பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்த பின் பன்னீர்

Published On:

| By Kalai

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் பயணித்தவர்களை விரைவில் சந்தித்து ஆசி பெறுவேன் என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை நேற்று (செப்டம்பர் 27)ஓ.பன்னீர்செல்வம் நியமித்தார்.

இதையடுத்து ஒரு மணி நேரத்திற்குள் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்த சூழலில் சென்னை அசோக்நகரில் பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே சி டி பிரபாகர், கு.ப. கிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், மூத்த அரசியல் தலைவர், அண்ணன் பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களை நேரில் சந்தித்து அவரிடம் நல்ல ஆலோசனைகளைப் பெறுவதற்காக வந்திருந்தோம்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்திலிருந்து தற்போது வரை எங்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

மூத்த அரசியல் தலைவர் என்ற முறையில் தமிழக மக்களிடம் நல்ல கருத்துகளை எடுத்துச் சொல்லி வருகிறார்.

எம்.ஜி.ஆர் இந்தக் கட்சியை எதற்காக தோற்றுவித்தார், ஜெயலலிதா இதை எப்படி மாபெரும் இயக்கமாக வளர்த்தார், அதன் கொள்கைகள் என்ன என்பது பற்றி பண்ருட்டி ராமச்சந்திரன் சொல்லும்போது மக்கள் அதை ரசித்து கேட்கிறார்கள்.

அவர் பேசுவது தனித்துவம் பெறுகிறது.

பொறுத்திருந்து பாருங்கள், கடந்த காலங்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உடன் இருந்தவர்களை நேரில் சந்தித்து அவர்களுடைய ஆசிகளையும் பெறுவேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

அதிமுகவில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கப்பட்டது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு அதனை எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறிச் சென்றார் ஓ.பன்னீர்செல்வம் .

கலை.ரா

”தடையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்” : பிஎஃப்ஐ தமிழக தலைவர்!

ரசிகர்களைச் சந்தித்த விஜய்: வைரலாகும் வீடியோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share