ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-2 என்ற இந்திய அணி பின்தங்கிய நிலையில், மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் 4ஆவது டெஸ்ட் கடந்த 23ஆம் தேதி தொடங்கியது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து 3ஆம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 544 ரன்கள் குவித்து 186 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இதற்கிடையே முதல் இன்னிங்சில் இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோ ரூட் அபாரமாக விளையாடி தனது 38ஆவது சர்வதேச டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியில் சங்கக்கரா சாதனையுடன் இணைந்தார்.

மேலும், 120 ரன்களை தொட்டபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் 13379 ரன்கள் அடித்து, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த 2ஆவது வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன்னதாக 13378 ரன்களுடன் ரிக்கி பாண்டிங் 2ஆவது இடத்தில் இருந்தார். அவரது சாதனையை முறியடித்தார்.
இந்த பட்டியலில் 15,921 ரன்களுடன் இந்திய அணி ஜாம்பவான் சச்சின் முதலிடத்தில் உள்ளார். அவரது சாதனையை முறியடிக்க இன்னும் 2542 ரன்கள் தேவைப்படும் நிலையில், அதனை தற்போது 35 வயதாகும் ரூட் செய்து முடிப்பரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக ரிக்கி பாண்டிங் அளித்த பேட்டியில், “வாழ்த்துக்கள், ஜோ ரூட். அற்புதம். அட்டவணையில் இரண்டாவது இடத்தில் முன்னேறியுள்ளீர்கள். இப்போது செல்ல வேண்டிய ஒரே ஒரு விஷயம். டெண்டுல்கரை விட சுமார் 2,500 ரன்கள் பின்தங்கியுள்ளது தான். ஆனால் கடந்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் அவர் விளையாடி வரும் விதம், அவரால் ஏன் முடியாது என கேள்வியை எழுப்பியுள்ளது” என்றார்.
தொடர்ந்து அவர், “ஜோ ரூட்டின் வயது என்ன? 35 வயதுதான் ஆகிறது. பல வருடங்களாக அவரது ரன் குவிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. நேற்று இன்னும் அதிகரித்துக் கொண்டிருந்தது. அவரால் சச்சின் அடித்த ரன்னை விரட்ட முடியுமா? பார்ப்போம். அவர் அதைச் செய்யக்கூடும்” என பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
