2023 ஐபிஎல் தொடருக்கு பிறகு முழங்கால் அறுவை செய்துகொண்ட ‘தல’ தோனி, மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு 2024 ஐபிஎல் தொடரில் களமிறங்கினார்.
இந்த தொடரின் துவக்கத்திற்கு முன்பே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய தோனி, அந்த பொறுப்பை இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாத்திடம் வழங்கினார்.
ருதுராஜ் கெய்க்வாத்தும் வெற்றிக் கணக்குடனேயே சென்னை அணியின் கேப்டன்சி பொறுப்பை துவங்கினார். இதுவரை அவரது தலைமையில் 6 போட்டிகளில் சென்னை அணி விளையாடியுள்ள நிலையில், அதில் 4-இல் வெற்றி பெற்று சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
கேப்டனாக இல்லாவிட்டாலும், பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும், களத்தில் தனது குறும்புத்தனத்தாலும் ரசிகர்களுக்கு தொடர்ந்து விருந்தளித்து வருகிறார், ‘தல’ தோனி. குறிப்பாக, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் களமிறங்கி, ஹாட்ரிக் சிக்ஸ் விளாசிய தோனி, ரசிகர்களுக்கு ஒரு கறி விருந்தையே வழங்கினார் என்றுதான் கூற வேண்டும்.
42 வயதிலும் ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தி வந்தாலும், தோனி அவ்வப்போது முழங்கால் பிரச்சனை காரணமாக அவதிப்படும் வீடியோ காட்சிகளும் வெளியாகி, ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவரது கடைசி ஐபிஎல் தொடர் இதுவே எனவும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.
இந்நிலையில், சென்னை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவிடம் “தோனி 2025 ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா?” என எழுப்பப்பட்ட கேள்விக்கு, ரெய்னா “அவர் விளையாடுவார்” என பதில் அளித்துள்ளார்.
https://twitter.com/JioCinema/status/1780502150553952409
அதேபோல, அப்போது சுரேஷ் ரெய்னாவுடன் இருந்த ஆர்.பி.சிங், “எனக்கும் இது அவருடைய கடைசி சீசன் போல தெரியவில்லை” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சுரேஷ் ரெய்னாவின் இந்த பதில் தல தோனியின் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
”இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை” : உயர்நீதிமன்றம்
’அந்த படத்த எப்படி லாபம்னு சொல்லுவீங்க?’ : யூடியூப் சேனலுக்கு திருப்பதி பிரதர்ஸ் கண்டனம்!