“பாஜகவினரின் காதையும் பிடித்து வெளியே இழுத்து வரும் நாள் விரைவில் வரும்” என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி ஆசிரியர் பணிநியமன ஊழல் வழக்கிலும், கால்நடை கடத்தல் வழக்கில் கட்சியின் மூத்த தலைவர் அனுப்பிரதாவும் கைது செய்யப்பட்டு வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதனால், திரிணாமுல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையான வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மம்தா பானர்ஜி, பாஜகவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.
கொல்கத்தாவில் கடந்த செப்டம்பர் 8ம் தேதி நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, ”திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை கைது செய்வது வாயிலாக, தொண்டர்களை மிரட்டலாம் என பாஜக நினைக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.

அதற்கு மேற்குவங்க பா.ஜ.க தலைவர் சுகந்தா மஜூம்தார் கடந்த செப்டம்பர் 27ம் தேதி கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது,
“சிறைக்குச்செல்லும் அமைச்சர்களில் முதல்வரும் இருப்பாரா என்று தெரியவில்லை. ஒருவேளை முதல்வரும் ஜெயிலுக்கு செல்லும் நிலை வரலாம்” எனப் பேசியிருந்தார். இது, மேற்கு வங்க அரசியலில் புயலைக் கிளப்பியது.
இந்த நிலையில், மேற்குவங்க மாநிலம் பபானிபூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று (அக்டோபர் 13)கலந்துகொணட முதல்வர் மம்தா பானர்ஜி, “இன்று நீங்கள் (பாஜக) அதிகாரத்தில் இருக்கிறீர்கள். அதனால், விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டுகிறீர்கள்.
நாளை உங்களிடம் அதிகாரம் இருக்காது. இதே விசாரணை அமைப்புகள் உங்கள் வீடுகளுக்குள் புகுந்து உங்கள் காதைப் பிடித்து வெளியே இழுத்துவரும். அந்த நாள் விரைவில் வரும்.
துர்கா பூஜையின்போது வதைபடும் அசுரர்கள் இடத்தில் மகாத்மா காந்தியை வைத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இந்த அநாகரிகத்திற்கு மக்கள் பதிலளிப்பார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
