கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கீரநத்தம் பகுதியில் காட்டு யானை புகுந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி கிராம பகுதிகள் அமைந்துள்ளன. இந்த பகுதிகளில் வனத்தில் இருந்து அவ்வப்போது காட்டு யானைகள் வெளியேறி ஊருக்குள் முகாமிடுவது வழக்கமாக உள்ளது.
இந்த யானைகள் கூட்டமாகவும், ஒற்றையாகவும் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன. இதனால் பொதுமக்கள் தாக்கப்படும் சம்பவங்களும் நடைபெறுகிறது.
பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகப் பகுதியிலிருந்து இன்று அதிகாலையில் மூன்று ஆண் யானைகள் வனத்தை விட்டு வெளியேறின, இந்த காட்டு யானை கூட்டம் கோயம்புத்தூர் – மேட்டுப்பாளையம் சாலையைக் கடந்து கிழக்கு நோக்கிச் சென்றன. தற்போது அந்த யானைகள் கீரநத்தம் பகுதியில் உள்ள குட்டையில் முகாமிட்டுள்ளன.
அப்பகுதியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் ஏராளமான இளைஞர்கள் சென்று வருவது வழக்கம்.
இந்த யானைகளை மீண்டும் பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதிக்குத் திருப்பி அனுப்பும் வகையில் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 10க்கும் மேற்பட்ட வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
