அரவிந்த கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம், அனைத்திற்கும் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் மே 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, தான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா தத்தா முன்னிலையில் நேற்று(ஏப்ரல் 30) விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் மூத்த வழக்கறிஞர் டாக்டர் அபிஷேக் மனு சிங்வி கடுமையான வாதங்களை முன்வைத்தார்.
99 சதவீதம் உண்மை தன்மை இல்லை!
அவர், “புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் சரத் ரெட்டி, ராகவ் மொகந்தா உட்பட பலருக்கு நீதிமன்றங்கள் இடைக்கால ஜாமீன் கொடுத்துள்ளது. ஆனால் அப்போது எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காத அமலாக்கத்துறை, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மட்டும் சிறப்பு நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரையில் இத்தனை எதிர்ப்புகளை தெரிவிப்பது ஏன் ?
நடந்து முடிந்த கோவா சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு கெஜ்ரிவால் சென்றார். ஆனால் அதனையும் டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தையும் அமலாக்கத்துறை தொடர்புப்படுத்தி உள்ளது. கோவா தேர்தலின் போது ஹவாலா பணத்தை கெஜ்ரிவால் பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை தவறான அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளது.
டெல்லி துணை நிலை ஆளுநரின் அனுமதியோடு தான் புதிய மதுபான கொள்கை திட்டமே கொண்டு வரப்பட்டது. அதேபோல எம்.எல்.சி கவிதாவும் கைது செய்யப்பட்டுள்ளார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நல்ல நட்பில் இருந்தார் என்பதற்காக விசாரணை வளையத்திற்குள் அவர் கொண்டுவரப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்
டெல்லி மதுபான கொள்கை விவகாரம் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான அமலாக்கத்துறை நடவடிக்கை ஆகியவற்றில் 99 சதவீதம் உண்மை தன்மை மற்றும் ஆதாரங்கள் கிடையாது. மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கவிதாவின் சி.ஏ புஜ்ஜி பாவுக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.
மேலும் இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவிலுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை, குற்றம் செய்ததற்கான தெளிவுகளும் இல்லை. அவ்வாறான நிலையில் எவ்வாறு இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே இந்த கைது நடவடிக்கையை சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும்” என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதம் நிறைவு செய்யப்பட்டது.
கேள்விகளை அடுக்கிய நீதிபதிகள்!
இதனையடுத்து அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல் எஸ்.வி. ராஜூவை நோக்கி நீதிபதி சஞ்சீவ் கண்ணா பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
“வாழ்க்கை மற்றும் சுதந்திரம் எப்போதுமே மிகவும் முக்கியம். அதனை நீங்கள் ஒருபோதும் மறுக்க முடியாது.
கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட வழக்கில் இதுவரை எந்தவித இணைப்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது எடுக்கப்பட்டிருந்தால், கெஜ்ரிவால் இந்த விவகாரத்தில் ஈடுபட்டது தெரியவந்திருக்கும். பொதுத்தேர்தலுக்கு முன்னதாக ஏன் கைது செய்யப்பட்டார் என்பதை என்னிடம் தெரிவியுங்கள்.
இந்த வழக்கில் நீதித்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மத்திய நிறுவனம் குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.
ஆரம்பகட்ட நடவடிக்கைகளுக்கும், கைது நடவடிக்கைக்கும் இடையில் ஏன் இவ்வளவு இடைவெளி? எனத் தெரிவிக்க வேண்டும்” என்று அமலாக்கத்துறைக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
இதனையடுத்து வழக்கு விசாரணையை மே 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, அப்போது அமலாக்கத் துறை சார்பில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Comments are closed.