தமிழகத்தை ஏன் மீட்கவேண்டும் ? தவெக மாநாட்டில் முன்னாள் ஐஆர்எஸ் அருண்ராஜ் பேச்சு!

Published On:

| By Kavi

பிளவுவாத சக்திகளை தமிழ் மண்ணில் வேரூன்ற விடக்கூடாது என்று முன்னாள் ஐஆர்எஸ் அருண்ராஜ் கூறியுள்ளார்.

தவெக இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் இன்று (ஆகஸ்ட் 21) நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இதில் தவெக கொள்கை பரப்புப் பொதுச் செயலாளரும், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியுமான அருண்ராஜ் பேசுகையில், “கள்ளழகர் ஆற்றில் இறங்கினால் சித்திரை திருவிழா, நமது தவெக தலைவர் மதுரை மண்ணில் இறங்கினால் அது அரசியல் திருவிழா.

கூட்டம் கூட்டியவனெல்லாம் தலைவனாக முடியாது என்றார்கள். இது கூட்டம் அல்ல தவெகவின் படை. இந்த கூச்சல் சத்தம் அல்ல போர் முரசு கொட்டும் சத்தம்.

ADVERTISEMENT

விஜய்க்கெல்லாம் அரசியல் தெரியுமா என்று கேட்டார்கள்…. உண்மைதான் உங்கள் அரசியல் அவருக்கு தெரியாது. ஏனென்றால் அவருக்கு ஊழல் செய்ய தெரியாது.

கவர்ச்சியான வாக்குறுதி கொடுத்து மக்களவை நம்பவைத்து ஏமாற்ற தெரியாது. சொந்த குடும்பத்தை காப்பாற்ற மாநிலத்தை அடகு வைக்க தெரியாது. இதுபோன்ற மோசமான அரசியல் விஜய்க்கு தெரியாது.

ADVERTISEMENT

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்ற அரசியல் மட்டும்தான் தெரியும். மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன் பற்றி படித்திருப்பீர்கள். நாளை தமிழகத்தை மீட்கப்போகும் சுந்தரப்பாண்டியன் இங்கிருக்கிறார்.

தமிழ்நாட்டை ஏன் மீட்க வேண்டும்…திமுகவை ஏன் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். முதல் காரணம், திராவிட கட்சிகள் தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் இன்றைய நிலை என்ன என்பதுதான் கேள்வி.

அண்ணா தனது குடும்பத்துக்காக எந்த சொத்தையும் சேர்த்து வைக்கவில்லை. சொல்லப்போனால் அவருக்கு கடன்தான் இருந்தது. ஆனால் இன்று இருக்கும் அமைச்சர்கள் அப்படிதான் இருக்கிறார்களா” என்றார்.

மேலும் அவர், “மற்ற நாடுகளெல்லாம் டெக்னாலஜியை கண்டுபிடித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கு ஒவ்வொரு மசூதிக்கு கீழும் கோயில் இருக்கிறதா என்று கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிளவுவாத சக்திகளை தமிழ் மண்ணில் வேரூன்ற விடலாமா. இதற்கு திமுகவை நம்பினால் நட்டாத்தில் விட்டுவிட்டு போய்விடுவார்கள். கடந்த வாரம் ஒரு முக்கியமான அமைச்சர் வீட்டில் ரெய்டு நடத்தினார்கள். இன்னும் இரண்டு ரெய்டு நடத்தினால் என்ன செய்வார்கள் தெரியுமா, கருப்பு பலூன் பறக்கவிட்டவர்கள், மோடி வருவது தமிழ்நாட்டுக்கு நன்மை என்று சொல்வார்கள்.

நாளைக்கே பாஜகவுடன் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டுக்கு தேவை என்றுகூட சொல்வார்கள்.

விஜய் செய்தது மிகப்பெரிய தியாகம். இன்னும் 10, 15 ஆண்டுகளுக்கும் படம் நடித்திருக்கலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு வருகிறார். அவருக்கு எல்லாம் கொடுத்த உங்களுக்கு எதாவது செய்ய வேண்டுமென வருகிறார். அவர் பின்னால் நாமெல்லாம் நிற்க வேண்டும்” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share