WTC Final: ஆடுகளத்துக்குள் நுழையும் முன்பே அஸ்வின் ‘விக்கெட்டை’ வீழ்த்தியது ஏன்?

Published On:

| By Jegadeesh

போட்டி தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே நான் ஆடும் லெவனில் இருக்க வாய்ப்பில்லை என்பது எனக்கு தெரிந்து விட்டது என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து கோப்பையை தவறவிட்டது.

இதனிடையே, இந்த உலககோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படாததே முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.

ரசிகர்களும் அஸ்வினை அணியில் சேர்க்காதது குறித்து தங்களது ஆதங்கத்தை சமூக வலைதள பக்கங்களில் தெரியப்படுத்தினார்கள். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான கவாஸ்கரும், சச்சின் டெண்டுல்கரும் அஸ்வின் சேர்க்கப்படாதது ஏன் என்று பிசிசிஐ யிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இச்சூழலில், தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டியில் திண்டுக்கல் அணியின் கேப்டனாக விளையாடி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிபோட்டியில், இந்திய அணியில் தான் ஏன் இடம் பெறவில்லை என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.

 ”இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில் எனது பங்கும் இருக்கிறது. அதனால் நான் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்று விரும்பினேன். இதற்கு முன்னர் நடைபெற்ற டெஸ்ட் இறுதிப் போட்டியில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளேன். அந்த நேரத்திலும் நான் சிறப்பாகவும் பந்து வீசி உள்ளேன்.


2018 , 2019 ஆம் ஆண்டில் இருந்து நான் சிறப்பாகவே பந்து வீசி வருகிறேன். கடந்த முறை எங்களது இங்கிலாந்து பயணத்தில் 2-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தது. அப்போது நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளர் என ஆடும் லெவனில் பவுலர்கள் இருந்தனர். அது போன்ற முறையையே இந்த முறையும் செயல்படுத்தலாம் என்று அவர்கள் எண்ணியிருக்கலாம்.

போட்டி தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே நான் ஆடும் லெவனில் இருக்க வாய்ப்பில்லை என்பது எனக்கு தெரிந்து விட்டது” என்று பேசியுள்ளார்.

மேலும், “கிரிக்கெட்டில் பவுலர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் வெவ்வேறு விதமான அளவுகோலின் கீழ் நடத்தப்படுவது வழக்கம். சிலருக்கு 20 போட்டிகள், சிலருக்கு 10 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்திய அணியின் ஜெர்சியை நான் அணிந்தபோது எனக்கான வாய்ப்பு குறித்து நான் அறிந்திருந்தேன். அதற்கு தயாராகவும் இருந்தேன். அது என் கையிலும் இல்லை. நான் யார்? என்னால் என்ன செய்ய முடியும் என்பது மட்டுமே என்னிடம் இருக்கிறது.

என்னுடைய சிறு வயதின் போது இந்திய அணியின் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் அதிக ரன்களை அடிப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் பவுலர்கள் ஏன் ரன்களை கட்டுப்படுத்த முடிவதில்லை என்பதை எண்ணியே நான் ஒரு பவுலராக வர வேண்டும் என்று ஆசைப்பட்டேன்” என்று கூறியுள்ளார் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான களத்தில் விளையாட வேண்டிய அஸ்வின் தற்போது திண்டுக்கல் மைதானத்தில் விளையாடி வருகிறார். கிரிக்கெட் வீரர்களுக்கு எல்லா மைதானமும் ஒன்றுதான், எந்த மைதனத்தில் விளையாடினாலும் பேட்டும், பந்தும் ஒன்றுதான் என்றாலும் இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தொடர்ந்து தன்னுடைய திறமையால் பல விக்கெட்டுகளை வீழ்த்தியவர் அஸ்வின் அப்படிப்பட்ட அஸ்வினின் ’விக்கெட்டை’ உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆடுகளத்துக்குள் நுழையும் முன்பே வீழ்த்தியது ஏன்? இதற்கு யார் காரணம் ? என்ற கேள்வியை ரசிகர்கள் கோபத்துடன் முன்வைத்து வருகின்றனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மாநில முதல்வரா? குடும்ப முதல்வரா? ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

செந்தில் பாலாஜிக்கு சர்ஜரி எப்போது?: காவேரி மருத்துவமனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share