தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பெற்றோர் தேசியக் கொடி ஏற்றாதது பேசு பொருளாகியிருக்கிறது.
இன்று (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் 77ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி பிரதமர் மோடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை, அனைவரது வீட்டிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
அதன்படி அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது வீடுகளில் தேசிய கொடி ஏற்றினர். சிலர் அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர்.
பிரதமர் மோடியின் அறிப்பைத் தொடர்ந்து பாஜகவினர் தங்களது வீடுகளில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.
ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவரான அண்ணாமலையின் பெற்றோர் வீட்டில் தேசிய கொடி ஏற்றப்படவில்லை.
மாநில தலைவரின் பெற்றோரின் வீட்டிலேயே கொடி ஏற்றாதது ஏன் என்று பாஜகவுக்குள்ளே கேள்விகள் எழுந்தன.
இதுதொடர்பாக கரூர் பாஜக தரப்பில் நாம் விசாரித்த போது,
“கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னையில் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, கோவையில் இன்ஜினியரிங் படித்த பின் வேலை இல்லாமல் வீட்டிற்கு வர வேண்டாம் என்று பெற்றோர் கூறியதாகவும், அதனால் மாதம் 8000 சம்பளத்திற்கு வரவேற்பாளர் வேலை பார்த்ததாகவும் 20 தேதிக்கு மேல் 2 வேலை சாப்பாடும் 25 தேதிக்கு மேல் 1 வேலை மட்டுமே சாப்பிட்டதாகவும் கூறியிருந்தார்.
இதனை பார்த்த அண்ணாமலையின் பெற்றோர்கள், 70 ஏக்கர் தோட்டம் வைத்திருந்த போதும், ஒரே மகனுக்கு சாப்பாடு கூட சரியாக போட வில்லை என்ற அளவில் பேசியிருந்ததால் அதிருப்தி அடைந்தனர்.
அதோடு She deserved a better husband than me என மனைவியை மிக புகழ்ந்து பேசியிருந்தார் அண்ணாமலை. பெற்றோர் குறித்து எதுவும் குறிப்பிடாமல் தவறாக சித்தரித்ததால் இன்று கரூர் தொட்டாம்பட்டி வீட்டில் தேசியக்கொடி ஏற்றுங்கள் என்று கூறியும் முடியாது என்று புறக்கணித்துள்ளனர்” என்று தெரிவித்தனர்.
அண்ணாமலையின் பெற்றோரே வீட்டில் தேசியக்கொடி ஏற்றாதது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
அதேசமயம் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியில் இன்று பாத யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை அங்கு தேசிய கொடி ஏற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
சாதிய பிரிவுகள்… கண்காணிக்க உளவு பிரிவு வேண்டும்: திருமாவளவன்
“உங்களை நாய் கடித்தால் இங்கே வாங்க” : ஈபிஎஸுக்கு மா.சுப்பிரமணியன் பதில்!