விஜய்யின் லியோ: அதிகாலை காட்சியில் அதீத ஆர்வம் ஏன்?

Published On:

| By Kavi

Why Does Leo Movie to have shown at 4 am?

திரையரங்குகளில் அதிகாலை காட்சிக்கு  அதிக விலைக்கு டிக்கட் விற்பனை செய்யப்படுகிறது, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது என்கிற குற்றசாட்டு கடந்த ஐந்து வருடங்களாக கூறப்பட்டு வந்தாலும் அதிகாலை காட்சிகள் அரசின் அனுமதி இன்றியே சென்னையில் திரையிடப்பட்டு வந்தது.

அந்த காட்சிக்கு அப்படத்தில் நடித்த நடிகர்களோ அல்லது அவரது குடும்பத்தினரோ கலந்துகொள்வதும் அது சம்பந்தமான புகைப்படங்கள், வீடியோக்களை ஊடகங்களில் வெகுவிரைவாக கொண்டு செல்ல தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நட்சத்திர நடிகரும் தங்கள் புகழ்பாடும் புரமோக்கள், மற்றும் சமூகவலைதள புரமோட்டர்களை முன்னணி நடிகர்கள் பராமரித்து வருகின்றனர்.

இந்த வருடம் ஜனவரி 10 ஆம் தேதி துணிவு படத்தின் அதிகாலை காட்சிக்கு வந்த ரசிகர் ஒருவர் அவரது தவறான நடவடிக்கையால் விபத்தில் சிக்கி மரணமடைந்தார். அதன் காரணமாக அதன்பின் தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்குவதை நிறுத்திவைத்தது தமிழ்நாடு அரசு.

இந்நிலையில், லியோ படத்தை அக்டோபர் 18 ஆம் தேதி மாலை மற்றும் இரவுக்காட்சியை சிறப்புக்காட்சி என்று சொல்லி அதிகவிலை வைத்து நுழைவுச் சீட்டு விற்பனை செய்யலாம் என்று தயாரிப்பு தரப்பு திட்டமிட்டனர்.  சென்னை வடபழனியில் இயங்கிவரும் கமலா திரையரங்கத்தின் சமூகவலைதளப் பக்கத்தில் முதலில் இந்தத் தகவல் வெளியானது. நுழைவுச் சீட்டுகளுக்கு ஆயிரம், ஐநூறு என்று கட்டணம் நிர்ணயம் செய்வதை தற்போதைய சூழலில்அரசாங்கம் அனுமதிக்காது  என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு சிலர் அறிவுறுத்தியுள்ளனர்.

விடாமல், அக்டோபர் 19 ஆம் தேதி காலை ஏழுமணிக்கே காட்சிகளைத் தொடங்க அனுமதியுங்கள் என்று தமிழ்நாடு அரசுக்குகோரிக்கை வைக்கப்பட்டது .சிறப்புக்காட்சி அனுமதி கேட்பதையும் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டால் பொதுவெளியில் விவாதப்பொருளாகி அரசியலாகிவிடும் என்பதால் முதல் ஆறு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிட லியோ தயாரிப்பாளருக்கு அனுமதி வழங்கி அதற்கான காட்சி நேரத்தையும் ஒழுங்குபடுத்தி அரசு ஆணை பிறப்பித்தது.

இதன் மூலம் சிறப்புக்காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டால் அரசு எங்களுக்கு எதிராகச் செயல்படுகிறது என்று விமர்சனம் செய்வது என்ற விஜய் தரப்பின் திட்டம் தவிடுபொடியானது. அரசு அக்டோபர் 19 ம் தேதி முதல் 24ம் தேதி வரை தினசரி 5 காட்சிக்கு அனுமதி வழங்கியபின் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என வழக்கு தொடுத்துள்ளது.

ஷாரூக்கான் நடித்து வெளிவந்த ‘பதான்’ படத்திற்கு மும்பையில்  7 காட்சிகளும், டில்லியில் 6 காட்சிகளும் திரையிடஅனுமதி வழங்கப்பட்டதை முன் உதாரணமாக தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ள தயாரிப்பு தரப்பு மேலும்,

“லியோ படம் 2 மணி நேரம் 43 நிமிடங்கள் ஓடுகிறது. 20 நிமிட இடைவேளை நேரத்துடன் சேர்த்து 3 மணி நேரம் 3 நிமிடம் ஒவ்வொரு காட்சிக்கும் தேவைப்படுகிறது. ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் ரசிகர்கள் வந்து போக 40 நிமிட நேரம் தேவைப்படுகிறது.

ஆக, ஒரு காட்சிக்கு 3 மணி நேரம் 45 நிமிடங்கள் தேவை. ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிட வேண்டுமென்றால் 18 மணி நேரம் 45 நிமிடங்கள் தேவை. ஆனால், அரசு ஆணையின்படி காட்சிகளை காலை 9 மணியிலிருந்து நள்ளிரவு 1.30க்குள் முடிக்க வேண்டுமென்பதில் 16 மணி நேரம் 30 நிமிடங்கள் மட்டுமே உள்ளது. காலை 7 மணிக்குக் காட்சிகளை ஆரம்பித்தால்தான் அவர்கள் சொன்ன நேரத்தில் முடிக்க முடியும்.

கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு திரையிட அனுமதி தந்துள்ளார்கள். எனவே, அது போலவே தமிழகத்திலும் தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்,” என குறிப்பிட்டுள்ளார்கள்.

அதிகாலை காட்சிக்காக லியோ தயாரிப்பாளர் ஏன் முட்டி மோதுகிறார் என விசாரித்தபோது ரஜினிகாந்துக்கு இணையாக தனது சம்பளத்தை 100 கோடியாக உயர்த்திக்கொள்ள மாஸ்டர் படத்தை தனது உறவினர் மூலமாக தயாரிக்க செய்தார் விஜய். அதற்கு உறுதுணையாக இருந்தவர் தயாரிப்பாளர் லலித்குமார். கடந்த வருடம்  கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’, இந்த வருடம்  ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ ஆகிய படங்கள்  விஜய் நடிப்பில் வெளியான முந்தைய படங்களின் சாதனையை முறியடித்தது.

கமல்ஹாசன், ரஜினிகாந்த்தை காட்டிலும் வியாபாரம், வசூல் இரண்டிலும் விஜய்யை முதன்மையானவராக முன் நிறுத்திக் கொள்ள லலித்குமார்  தனது உதவியாளர் ஜெகதீஷ் மூலம் தயாரித்துள்ள படம் தான் லியோ என்கின்றது தயாரிப்பாளர்கள் வட்டாரம்.

அதிகாலை 4 மணி காட்சி, 7 மணி காட்சிகளை திரையிட அனுமதி பெறுவதன் மூலம் படம் வெளியாகும் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த கதாநாயகன் என்ற சாதனையைப் படைக்க முயற்சிக்கிறது விஜய் தரப்பு என்கின்றனர்.

பொதுவெளியில் படத்தின் மீதான கவனத்தை திருப்பி அதிகபட்ச எதிர்பார்ப்பை ஏற்படுத்த  அரசிடம் கோரிக்கை, நீதிமன்றத்தில் வழக்கு என படத்தை பற்றி தினமும் ஏதாவது ஒரு செய்தியை ஊடகங்களில் இடம்பெற செய்து வருகிறது லியோ தரப்பு. படம் அறிவிக்கப்பட்டதில் இருந்து இன்று வரைபடம் சம்பந்தபட்ட எந்தவொரு தகவலையும் படத்திற்கான புரமோஷனுக்காக பயன்படுத்தும் வேலையை விஜய் மக்கள் இயக்கத்தின் தகவல் நுட்ப பிரிவு செய்து வருகிறது.

இந்த நிலையில் லியோ பட டிரைலரில் விஜய் பேசும் கெட்ட வார்த்தையால்….  விஜய்யின் அக்மார்க் குடும்ப ரசிகர்கள் குழந்தைகளோடு   லியோ படத்தை பார்க்க வருவதற்கு தயங்குவதாகவும் கூறப்படுகிறது.  இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருக்கும் போதே கல்லா கட்டிவிடும் முயற்சியை தயாரிப்பு தரப்பில் மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிகாலை காட்சிகளால் வசூல் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறதா என விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம்.  “ 190 ரூபாய் டிக்கட்டை 500 முதல் 3000ம் வரை படம் வெளியாவதற்கு முன்பாகவே விற்க வேண்டும்.  இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 7 கோடி வரை மொத்த வசூல் கிடைக்கும். 6 நாட்களில் சுமார் 40கோடி ரூபாய் மொத்த வசூல் கிடைக்கும்.

இவர்கள் முன் உதாரணமாக கூறும் கேரளம், கர்நாடக, வட இந்திய மாநிலங்களில் அதிக விலைக்கு டிக்கட் விற்பனை செய்தாலும் அதற்குரிய வரிசெலுத்தப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் அப்படி வரியை முழுமையாக செலுத்துவது இல்லை. அத்துடன் திரையரங்குகளுக்கு சாதாரண நாட்களை போன்றே இதிலும் 30% பங்கு தொகை கிடைக்கும், இது கூடுதல் வருவாய் என்பதால் அதிகாலை காட்சிக்கு திரையரங்க உரிமையாளர்களும்  ஆர்வம் காட்டுகின்றனர்”  என்கின்றனர்.

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

-இராமானுஜம்

AUS vs SL ODI World cup 2023: முதல் வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா

இரவோடு இரவாக லியோ டிக்கெட்டை விற்று முடித்த பிவிஆர்!

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share