யோகி ஆதித்யநாத்தை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தது ஏன் என்று உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் உதித் ராஜ் இன்று (ஆகஸ்ட் 22) கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயிலர் படத்தின் ரிலீஸை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு கடந்த 9-ஆம் தேதி ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரை சந்தித்தார்.
கடந்த 19ஆம் தேதி யோகி ஆதித்யநாத்தை அவரது இல்லத்தில் ரஜினிகாந்த் சந்தித்தபோது காலில் விழுந்து வணங்கினார். ரஜினியின் இந்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சூழலில் நேற்று சென்னை வந்த ரஜினி யோகியின் காலில் விழுந்து வணங்கியது ஏன் என்பதற்கான விளக்கத்தை அளித்தார்.
இது குறித்து சென்னை விமானநிலையத்தில் பேசிய ரஜினி, “என்னுடைய பயணத்தின்போது நட்பு ரீதியாக அரசியல் தலைவர்களை சந்தித்தேன். சன்னியாசி, யோகி ஆகியோர் வயதில் நம்மை விட சிறியவர்களாக இருந்தால் கூட காலில் விழுந்து வணங்குவது எனது பழக்கம். அதனால் தான் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து வணங்கினேன்” என்றார்.
இந்நிலையில், யோகி ஆதித்யநாத் அடுத்த பிரதமராகக் கூடும் என்பதால் தான் அவரது காலில் விழுந்துள்ளார் நடிகர் ரஜினி என்று உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் உதித் ராஜ் விமர்சனம் செய்துள்ளார்.
மேலும், ’யோகி ஆதித்யநாத்தை சந்தித்து அவரது காலில் விழுந்த ரஜினி பிரதமர் மோடியை சந்திக்கவில்லையே ஏன்?’ என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்

Comments are closed.