கேரளா சட்டமன்ற தேர்தலில் விஜய் தேவைப்படுவார் என்பதால் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி சேர காங்கிரஸ் விரும்புகிறது என தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
தவெக நிகழ்ச்சியில் இன்று நாஞ்சில் சம்பத் பேசியதாவது: இன்றைக்கு தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்று எல்லோரும் ஆசைப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கும் அந்த ஆசை இருக்கிறது.
ஓடிக் கொண்டிருக்கிற ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் என் பக்கத்து இருக்கையில் இருந்தார். ”நீங்க தவெகவுடன் கூட்டணிக்கு முயற்சிக்கிறீர்களா?” என அவரிடம் நான் கேட்டேன். அதற்கு, “எங்களுக்கு தவெக மீதுதான் காதல்.. ஆனால் கல்யாணம் செய்து கொண்டது திமுகவை” என்று வருத்தத்துடன் சொன்னார்.
அனைத்து கட்சிகளும் தவெக என்ற நந்தவனத்துக்கு வருவதற்கு நாள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கேரளாவில் மம்முட்டி- மோகன்லாலுக்கு நிகரான செல்வாக்கு விஜய்க்கு இருக்கிறது. 2026 தேர்தல் தமிழ்நாட்டில் நடக்கும் போது கேரளாவிலும் நடக்கும். அதனால் காங்கிரஸுக்கு விஜய் அங்கு தேவைப்படுவார். புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவிலும் காங்கிரஸுக்கு விஜய் தேவைப்படுவார். 2029 மக்களவைத் தேர்தலை சந்திக்க விஜய்யை ஒரு நல்வாய்ப்பாக கருதுகிறது காங்கிரஸ். விஜய் எடுக்கப் போகும் முடிவு காங்கிரஸ் கையில்தான் உள்ளது.
மிகப் பெரிய ராஜதந்திரி விஜய். திருவண்ணாமலையில் திமுக 1.35 லட்சம் வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகளின் மாநாடு நடைபெற்ற நாளில் அரசியலில் ஆயிரம் பிறை கண்ட, அண்ணா திமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையனை தவெகவில் இணைத்தார் விஜய். இதன் மூலம் திமுக இளைஞரணி மண்டல மாநாடு பற்றி யாரும் எதுவுமே பேசவில்லை. ஊடகங்கள், செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்ததை பற்றியே சொன்னார்கள்.
டிசம்பர் 5-ந் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுநாள். அவரது நினைவிடம் நோக்கி பேரணிகள் என அறிவித்தனர். அன்றைக்குதான் என்னை தவெகவில் விஜய் இணைத்துக் கொண்டார். அன்றைக்கு நான் இணைந்ததுதான் செய்தியானதே தவிர அந்த பேரணி நிகழ்ச்சியை எந்த தொலைக்காட்சியும் வெளிக்காட்டவில்லை.
எதிரியை எங்கே எப்போது அடிக்க வேண்டும் என்று லாவகம் தெரிந்த, இந்திய அரசியலிலேயே ஒரே ஒரு தலைவர் விஜய் மட்டும்தான். இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார்.
