தமிழ் திரையுலகில் எப்போதுமே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பும் இரண்டு நட்சத்திரங்கள் என்றால் (Rajinikanth’s Next Film Produced by Kamal Haasan), அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் தான். இவர்களின் தனிப்பட்ட நட்பு, திரையுலகில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. ரஜினிகாந்தின் 173வது திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், இந்தப் படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி கோலிவுட்டை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொங்கல் 2027 அன்று படம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த அறிவிப்பை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கங்களில் உறுதிப்படுத்தியுள்ளது. கமல்ஹாசனும் தனது எக்ஸ் (X) பக்கத்தில் இது குறித்து பதிவிட்டு, தனது அன்புக்குரிய நண்பரின் புதிய பயணத்திற்கு தயாரிப்பாளராக துணை நிற்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் சுந்தர் சி இருவரும் 1997 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படமான ‘அருணாச்சலம்’ படத்திற்குப் பிறகு மீண்டும் இணையும் இந்த கூட்டணி, ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 30 ஆண்டுகளுக்குப் இந்த வெற்றி கூட்டணி மீண்டும் திரும்புவது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரே படத்தில் நடிக்கவிருப்பதாக நீண்ட நாட்களாகவே பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

சூப்பர் ஸ்டாரின் 173வது படத்தினை உலகநாயகன் தயாரிக்கிறார் என்பதே இப்போதைய லேட்டஸ்ட் அப்டேட். அதே சமயம், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் ஒரு பிரம்மாண்ட திரைப்படத்திற்கான இயக்குநர் தேர்வு இன்னும் முடிவாகவில்லை. இருவரின் ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வகையில், வலுவான திரைக்கதையுடன் சமமான கதாபாத்திரங்கள் அமைய வேண்டும் என்பதில் இருபெரும் நட்சத்திரங்களும் உறுதியாக இருப்பதால், அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பல இயக்குநர்களின் பெயர்கள் இந்த படத்திற்காக பரிசீலனையில் உள்ளதாக முன்பு கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இடையேயான நட்பு அரை நூற்றாண்டுக்கும் மேலாக கோலிவுட்டின் பொற்கால அத்தியாயங்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது. “எங்களுக்குள் போட்டி கிடையாது, பொறாமையும் கிடையாது” என இருவருமே பல மேடைகளில் கூறியுள்ளனர். தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் படங்கள் தயாரிக்க வேண்டும் என்ற விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக கமல்ஹாசன் முன்னதாகவே தெரிவித்திருந்தார்.

ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததையடுத்து, ஆகஸ்ட் 13, 2025 அன்று கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியான வாழ்த்து மடலை வெளியிட்டு, தனது “அன்பு நண்பருக்கு” வாழ்த்து தெரிவித்து, அவரது ‘கூலி’ திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெறவும் வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் 173வது திரைப்படம் மற்றும் இருபெரும் நட்சத்திரங்களும் இணைந்து நடிக்கும் மற்றொரு பிரம்மாண்ட படைப்பு என கோலிவுட் அடுத்த சில ஆண்டுகளுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறது. சூப்பர் ஸ்டார் மற்றும் உலகநாயகனின் இந்த நட்புறவு, திரையுலகிற்கு மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை தொடர்ந்து வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.
- மாயோன்
