கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி நடந்த அமைச்சரவை மாற்றத்தை ஒட்டி திமுகவுக்குள் வேறு சில விவாதங்களும் நடந்துவருகின்றன. new ministers replacing Ponmudi and Senthil Balaji
கரூர் மாவட்ட அமைச்சராகவும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் இருந்த செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அதேபோல விழுப்புரம் மாவட்ட அமைச்சராக இருந்த பொன்முடியும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
இந்த நிலையில், இந்த மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர் யார் என்ற கேள்வி திமுக வட்டாரங்களில் தீவிரமாக பேசப்படுகிறது.
ஏற்கனவே, செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபோது கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக அமைச்சர் முத்துசாமி நியமிக்கப்பட்டார். இப்போது அவரே நியமிக்கப்படுவாரா அல்லது கூடுதல் துறை ஒதுக்கப்படும் என்று எதிர்பார்ப்பில் இருந்து சற்றே வருத்தத்தில் இருக்கும் மு.பெ.சாமிநாதனுக்கு கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் பதவி ஒதுக்கப்படுமா என்ற கேள்வி கோவை திமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

செந்தில்பாலாஜி சிறையில் இருந்தபோதும் கரூர் மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சர் என யாரும் நியமிக்கப்படவில்லை. அப்படி ஒரு சிறப்பு அந்தஸ்தை செந்தில்பாலாஜியின் சொந்த மாவட்டத்துக்கு கொடுத்திருந்தார் முதல்வர். செந்தில்பாலாஜி சிறையில் இருந்தபோதே அப்படி என்றால், அவர் இப்போது வெளியே இருக்கும் நிலையில் கரூருக்கென பொறுப்பு அமைச்சர் யாரும் நியமிக்கப்பட மாட்டார் என்றும், கோவை மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக யார் நியமிக்கப்பட்டாலும் அவர் செந்திலாலாஜியின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருப்பார் என்றும் சொல்கிறார்கள் கோவை திமுக வட்டாரங்களில்.
மேற்கே இப்படி என்றால் வடக்கே விழுப்புரம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் யார் என்ற கேள்வி திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது. இந்த ஆட்சியின் ஆரம்பத்தில் விழுப்புரம் மாவட்டத்திற்கு பொன்முடி, செஞ்சி மஸ்தான் என இரண்டு அமைச்சர்கள் இருந்தனர்.
ஆனால், இப்போது அமைச்சரவை பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டமாக விழுப்புரம் மாறி உள்ளது.
விழுப்புரம், வானூர், மயிலம், திண்டிவனம், செஞ்சி, விக்கிரவாண்டி, திருக்கோவலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை கொண்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சர் நியமிக்கப்பட்டே ஆக வேண்டிய சூழல் உள்ளது.
இது குறித்து விழுப்புரம் திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, “விழுப்புரம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக அமைச்சர் எ.வ.வேலுவா, அமைச்சர் கே.என்.நேருவா என்ற விவாதம் தான் மாவட்டத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இப்போது நடந்து வருகிறது.

அமைச்சர் வேலு ஏற்கனவே திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சராக இருக்கிறார். விழுப்புரத்தையும் அவரிடம் கொடுத்தால் திருவண்ணாமலையிலிருந்து திருப்பத்தூர் கள்ளக்குறிச்சி விழுப்புரம் என அவர் வலம் வர ஏதுவாக இருக்கும்.
மேலும், அவர் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருப்பதால்… அவரை பொறுப்பு அமைச்சராக நியமிக்கும் பட்சத்தில் தங்கள் தொகுதிகளுக்கு பாலம் சாலை பணிகளை இந்த கடைசி ஒரு வருடத்தில் எளிதாக பெறலாம் என திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதை முதல்வரின் கவனத்துக்கும் கூட கொண்டு சென்றிருக்கிறார்கள்.
மேலும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மீண்டும் அமைச்சர் மனோ தங்கராஜ் வந்துவிட்டதால் அங்கே பொறுப்பு அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு பழையபடி நெல்லையை கவனிக்கக்கூடும் என்றும் தெற்கே ஒரு பேச்சு இருக்கிறது.

இதை வலுப்படுத்துவதுபோல தற்போது நெல்லை பொறுப்பு அமைச்சராக இருக்கும் கே.என்.நேரு, திருச்சியில் இருந்து நெல்லை சென்று வருவதற்கே நேரம் சரியாக இருப்பதாக அம்மாவட்ட திமுகவினர் கூறுகிறார்கள்.
‘நெல்லையில் நேரு அண்ணாச்சியின் ஒர்க் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அவரால் சென்னை, திருச்சி, நெல்லை என அலைய முடியவில்லை. இதை நெல்லை மாவட்டத்தின் சில சட்டமன்ற உறுப்பினர்களிடமே அவர் மனம் திறந்து சொல்லியிருக்கிறார். எனவே, மீண்டும் நெல்லைக்கு தங்கம் தென்னரசை பொறுப்பு அமைச்சராக்கிவிட்டு நேருவை விழுப்புரம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆக்கலாமா என்ற பேச்சும் இருக்கிறது.
விழுப்புரம் என்றால் திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வழியில் தான் இருக்கிறது. எனவே கூடுதல் கவனம் செலுத்த முடியும். எனவே, நேருவை நெல்லை பொறுப்பு அமைச்சரிலிருந்து விடுவித்து விழுப்புரத்துக்கு நியமிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது” என்கிறார்கள்.
அமைச்சரவை மாற்றம் போலவே பொறுப்பு அமைச்சரவை மாற்றமும் முக்கியத்துவமான விவாதமாகியிருக்கிறது! new ministers replacing Ponmudi and Senthil Balaji
