ஹெல்த் டிப்ஸ்: ஆழ்ந்த உறக்கத்துக்கு எந்த மெத்தை, தலையணை சிறந்தது?

Published On:

| By Selvam

இரவு நிம்மதியாக, ஆழ்ந்த உறக்கம் இருந்தால்தான் அடுத்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க முடியும். தூங்குவதற்கு எந்த மெத்தை, தலையணை பயன்படுத்துவது சிறந்தது என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். அது பற்றிய விளக்கங்களைத் தருகிறார்கள் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மருத்துவர்கள்.

“எந்த வகையான மெத்தையைப் பயன்படுத்தினாலும் அது மிகவும் மிருதுவாக இருக்கக்கூடாது. சற்று உறுதியாக (Firm) இருக்க வேண்டும்.

அதாவது, நாம் படுக்கும்போது உடல் எடைக்கு ஏற்ப மெத்தை வளைந்து கொடுத்தால், அது மிருதுவானது என்று சொல்வோம்.

ஹோட்டல்களில் மிகவும் மிருதுவான மெத்தைகள் போட்டிருப்பார்கள். அதுபோன்ற மெத்தைகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

சரியான மெத்தையில் படுக்கவில்லை என்றால் அடுத்த நாள் காலையில் எழும்போதே முதுகு இறுக்கமாக இருப்பது, முதுகு வலி, இடுப்பு வலி ஏற்படலாம்.

சரியான மெத்தையைத் தேர்ந்தெடுத்துப் படுக்கும்போது எதிர்காலத்தில் முதுகு வலி வருவதற்கான வாய்ப்புகளும் குறையும்.

படுக்கும்போது மெத்தை அழுந்தாமல், அதன் வடிவம் மாறாமல் இருக்க வேண்டும். இடுப்பு வலி, முதுகு வலி இருப்பவர்கள், ஆரோக்கியமாக இருப்பவர்கள் என அனைவருக்கும் இந்த வகை மெத்தைதான் சரியானது.

அதேபோல், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தூக்க முறை (Pattern) இருக்கும். சிலர் கவிழ்ந்து படுப்பார்கள், சிலர் மல்லாந்து படுப்பார்கள், சிலர் ஒருக்களித்துப் படுப்பார்கள்.

எல்லா நிலைகளிலும் மாறி மாறி படுத்தாலும், பெரும்பாலான நேரங்களில் ஏதாவது ஒரு நிலையில்தான் தூங்குவார்கள். எந்த நிலையில் படுப்பவர்கள் என்றாலும் பெரிய அளவுள்ள தலையணைகள் பயன்படுத்தக்கூடாது.

அதாவது சிறிய தலையணை அல்லது தலையணையே பயன்படுத்தாமல் தூங்குவதுதான் சிறந்தது.

பெரிய அளவுள்ள தலையணை பயன்படுத்தும்போது தலை மேல் நோக்கியபடி அல்லது கழுத்து குனிந்த நிலையிலேயே நீண்ட நேரம் இருக்கும். தொடர்ந்து இப்படிப் பயன்படுத்தும்போது முதுகு வலி, கழுத்து வலி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

மெமரி ஃபோம் பில்லோ (Memory foam pillow) என்று மார்க்கெட்டில் கிடைக்கிறது. அந்தத் தலையணைகள் பார்ப்பதற்கு பெரிதாக இருக்கும். படுத்து, தலையை வைத்த பிறகு சுருங்கி சிறியதாக ஆகும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

பெரிதாக இருக்கும் தலையணையை சுருக்கி சின்னதாக ஆக்கி பயன்படுத்துவதற்கு, சிறிய தலையணையே பயன்படுத்தலாம்.

எந்த தலையணையைப் பயன்படுத்தினாலும், படுக்கும்போது தலை இயல்பான நிலையில் இருக்கிறதா என்று உறுதிசெய்து கொண்டால் போதுமானது” என்று விளக்கம் அளித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: முடக்கத்தான்கீரை தோசை

மாமன்னன மறந்துட்டாரு போல : அப்டேட் குமாரு

பொன் மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளில் சிபிஐ வழக்குப்பதிவு!

உயிரை பறித்த அலட்சியம்… பூனை கடித்து பெண் பலி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share