மதிப்பீட்டு உத்திகளில் எப்போது மாற்றம் வரப் போகிறது? – 2

Published On:

| By Kavi

when will there be a change in assessment strategies 2

நா.மணி

சமூக ஊடகங்களை பயன்படுத்துவது எவ்வளவு சவாலானதோ, அதே அளவு, பெரும் வாய்ப்புகளையும் அது வழங்குகிறது.

உதாரணமாக, மின்னம்பலம் இதழில் வெளியாகும் கட்டுரைகளை, உலகம் முழுவதும் உள்ள நண்பர்களோடு, சிறிது நேரத்தில் பகிர்ந்து கொள்ள முடிகிறது.

ஒரு இதழின் வழியாக, ஒருவரின் எழுத்தை தொடர்ந்து அல்லது அவ்வப்போது படிக்கும் வாசகர்களை தாண்டி, பலருடன் பல செய்திகளை பகிர்ந்து கொள்ள முடிகிறது.

அவர்களிடமிருந்து பின்னூட்டங்களைப் பெற முடிகிறது. அத்தகைய பின்னூட்டங்களில் பல, பத்திரிக்கைகளுக்கும் கட்டுரையாளர்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது. பின்னூட்டங்களில் மரபார்ந்தவை உண்டு. விமர்சனப் பூர்வமாக இருக்கும். நுட்பமானவையும் உண்டு. இப்படி பல வடிவ பின்னூட்டங்கள் கிடைக்கின்றன.

“மதிப்பீட்டு உத்திகளில் எப்போது மாற்றம் வரப்போகிறது?” என்ற தலைப்பில், கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை வெளியான, கட்டுரையின் முதல் பகுதிக்கு, காத்திரமான பல பின்னூட்டங்கள் வந்தன. அதில் பேராசிரியர்கள் ஆசிரியர்கள் கல்வியாளர்கள் என பலரும் அடக்கம். வந்த பின்னூட்டங்களின் வழி கிடைத்த விஷயங்களை முதலில் பகிர்ந்து கொண்டு, சென்ற வார தொடர்ச்சிக்குள் செல்வோம்.

பாடத்திட்டம், கற்றல் கற்பித்தல் முறைகள், மதிப்பீட்டு உத்திகள் ஆகிய மூன்றுமே சம அளவு முக்கியத்துவம் வாய்ந்தவை. பாடத்திட்டத்தில் செலுத்தும் முக்கியத்துவம் கற்றல் கற்பித்தல் முறைகளில் இருப்பதில்லை. அதேபோல், கற்றல் கற்பித்தல் முறைகளில் கவனம் செலுத்தும் அளவு மதிப்பீட்டு உத்திகளின் மீது கவனம் செலுத்துவதில்லை.

சில நேரங்களில், கற்பித்தல் முறையில் சிறிது பலவீனமாகவேனும் கவனம் செலுத்தப்படுகிறது. மதிப்பீட்டு உத்திகளில் கவனம் செலுத்துவதே இல்லை. கண்டு கொள்வதே இல்லை. பள்ளிக்கல்வியில் பாடத்திட்டத்திலும் கற்றல் கற்பித்தல் முறைகளில் தொடர் மாற்றங்களுக்கான முயற்சிகள் நடக்கிறது. கற்றல் கற்பித்தல் முறைகளை செழுமைப்படுத்த பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அது எந்தளவுக்கு அவை பயனுள்ளதாக இருக்கிறது? எந்தளவுக்கு ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது தனியான விவாதத்திற்கு உரியது.

கற்றல் கற்பித்தல் பயிற்சிகளின் மீது ஆதரவு, எதிர் குரல்கள் எழுகின்றன. விமர்சனங்கள், விவாதங்கள் உருவாகின்றன. மதிப்பீட்டு உத்திகளில் மாற்றம் எப்பொழுதேனும் அரிதாகவே உருவெடுக்கிறது. சில மதிப்பீட்டு முறைகள் கடின உழைப்பில் எழுந்தாலும் கால வெள்ளத்தில் குழி தோண்டி புதைக்கப்படுகின்றன. கடந்த வாரம் நாம் எழுதிய கட்டுரையும் மதிப்பீட்டு யுக்திகள் கற்றல் விளைவுகள் சார்ந்தவை. குறிப்பிட்ட கால இடைவெளியில், பாடத்திட்டம் மாற்றம் தவிர எந்த மாற்றமும் உயர்கல்வியில் நிகழவில்லை.

கற்பித்தல் முறைகளின் தேவை கூட இங்கு எழவேயில்லை என்பது ஆச்சரியம். குறைந்தபட்ச வழிகாட்டும் நெறிமுறை கூட இல்லை. அரசும் கல்வியாளர்களும் இந்தப் போதாமையைப் பற்றி உணரவில்லை. மதிப்பீட்டு உத்திகள் பற்றியும் கண்டுகொள்ளவே இல்லை.

மதிப்பீட்டில் மாற்றம் என்பதை, கேள்வித்தாள் வடிவ மாற்றம் என்று நிறைய பேர் புரிந்து கொண்டு உள்ளனர். இந்த நிலையில், மதிப்பீட்டு உத்திகள் பற்றிய ஒரு விவாதத்தை உருவாக்கவே , மின்னம்பலத்தில் கடந்த வாரம் ஒரு கட்டுரை முன்வைக்கப்பட்டது.

அதற்கு முந்தைய கட்டுரையும் (எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி) மதிப்பீட்டு உத்திகள் சார்ந்த கட்டுரையே. இவ்விரண்டையும் இணைத்தும் பின்னூட்டங்கள் கிடைத்தன. அதன் அடிப்படையிலும், முன் பின் முரண் நிறைந்த கருத்துக்கள் விவாதங்கள் விமர்சனங்கள் எழுந்தன.இருந்தாலும், மாணவர்களின் தேர்ச்சிக்கு அல்லது தோல்விக்கு ஆசிரியரே பொறுப்பு என்ற கருத்து பின்னூட்டங்கள் வழியாக வலுவாக எழுந்தது. இது மிகவும் ஆரோக்கியமானது.

when will there be a change in assessment strategies 2

“ஆசிரியரும் மாணவரும் பொறுப்பு” என்ற கருத்து நிலை கூட கவனிக்கப்பட வேண்டியதே. தோல்விக்கு மாணவனை மட்டுமே பொறுப்பாக்கி, ஆசிரியர், தனது கடமையிலிருந்தும் பொறுப்பில் இருந்தும் தப்பித்துக் கொள்கிறார். என்று வந்த பின்னூட்டமும் ஆசிரியர் சமூகத்தின் ஆரோக்கியத்தை உணர்த்துகிறது. “சரியாக தேர்வு எழுதாத மாணவனை தேர்ச்சி பெற செய்வதன் மூலம், மாணவனை அதே இடத்தில் ஆசிரியர்கள் வைத்திருக்கிறார்கள்” என்பது மற்றும் ஒரு பின்னூட்டம்.‌ “ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். மாணவன் வெற்றிக்கு உறுதுணையாக நிற்க வேண்டும். இவ்வாறு உழைத்தால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தானாக உயரும், கற்றல் மேம்படும். இதற்கு எப்படி ஆசிரியர்களை தயார் செய்வது?” என்ற கேள்வியும் பின்னூட்டத்தில் ஒன்று. கல்லூரிக் கல்வி தேர்வுகளில், தமிழில் எழுதக் கூட மாணவர்கள் தடுமாறுகிறார்கள். மாணவர்களின் இந்த நிலை எப்படி உருவானது? என்ற ஆதங்கத்தோடு சில பேராசிரியர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

“கற்றல் வாய்ப்புகள் அதிகரித்திருக்கிறது. மொத்த பள்ளி மற்றும் கல்லூரி சேர்ப்பு விகிதம் பெருமளவில் அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த கால நூற்றாண்டுக்கு முன்னர் அடைந்த கற்றல் அடைவுகள் கூட தற்போதைய மாணவர்களிடம் இல்லையே” என்ற விமர்சனத்தையும் பேராசிரியர்கள் பதிவு செய்து உள்ளனர். இதற்கு என்ன காரணம் என்று விவாதிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன் வைத்துள்ளனர். “தேர்ச்சி விகிதம், அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும், என்ற அரசின் முடிவும் இதற்குக் காரணம்” என்பது மற்றுமொரு பின்னூட்டம்.‌ “ஒரு மாணவனின் வெற்றி அல்லது தோல்வி என்பது முக்கியமல்ல. ஒவ்வொரு வகுப்புக்கும் ஏற்ற திறன்களை அவனால் மேம்படுத்திக் கொள்ள முடிகிறதா ? என்பதே முக்கியம்” என்பதை கல்வியில், கல்வி நிர்வாகத்தில், நீண்ட அனுபவம் உள்ள கல்வியாளரின் பின்னூட்ட மொழியாக உள்ளது. இப்போது கடந்த வார தொடர்ச்சிக்குள் செல்வோம்.

“மதிப்பீட்டு உத்திகளின் கட்டமைப்பே, ஏழை, எளிய, சமூக ரீதியாக பின்தங்கிய, மாணவர்களை, கற்றல் எல்லைகளுக்குள் வெளியே தள்ளுவதாக இருக்கிறது”. ‘விளிம்புநிலை மக்களை உள்ளடக்கி, கை தூக்கி விடுவதாக, கற்றல் கற்பித்தல் முறைகளும் மதிப்பீட்டு உத்திகளும் கட்டமைக்கப்படவில்லை” என்பது ஓர் ஆழமான விவாதத்திற்குரிய விடயங்கள். உயர்கல்வியில், குறிப்பாக, கலை அறிவியல் புலன்களில், மதிப்பீட்டு உத்திகள் எப்படி உள்ளது? எவ்வாறு கல்வித்தரத்தை பாதிக்கிறது? தரமற்ற கல்வியின் விளைவுகள் என்ன? என்பதை கொஞ்சம் ஆய்வு செய்வோம்.

தன்னாட்சி கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும், தேர்வு மதிப்பீடுகள் மலினம் அடைந்தது போல், வேறு எதுவும் மலினம் அடையவில்லை எனக் கூறலாம். பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்புகளில், விடைத்தாள் திருத்தும் போது,காலையும் மாலையும் தலா 25 முதல் 30 விடைத்தாள்கள் ஒரு பேராசிரியருக்கு தரப்படுகிறது. ஒரு நாள் ஒன்றுக்கு, சராசரியாக 50 முதல் 60 விடைத்தாள்களை பேராசிரியர்கள் மதிப்பீடு செய்து ஒப்படைக்க வேண்டும்.‌ குறைந்தபட்சம் 25 விடைத்தாள்களே என்று வைத்துக் கொண்டாலும் கூட, மூன்று மணி நேரத்தில், அதனை மதிப்பீடு செய்து தர வேண்டும்.

இவ்வாறு பல்கலைக்கழகங்கள் விதிகளை வகுத்துள்ளது. ஆனால், மூன்று மணி நேரத்திற்கு பதிலாக, அதிகபட்சம், இரண்டு மணி நேரத்தில், மதிப்பீட்டுப் பணிகளை வேக வேகமாக பேராசிரியர்கள் முடித்து கொடுத்து, விடுகிறார்கள். ஒரு மாணவன் சரியாக சராசரியாக 20 பக்கங்கள் மட்டுமே விடை எழுதி இருப்பதாகக் கொண்டால், இரண்டு மணி நேரத்தில், 500 பக்கங்களை ஒரு பேராசிரியர் மதிப்பீடு செய்து தர வேண்டும். அதாவது ஒரு நிமிடத்தில் சராசரியாக நான்கு பக்கங்களை படித்து மதிப்பீடு செய்து தர தந்து விடுகிறார்கள்.

மதிப்பீடுகளின் மதிப்பீடு

சராசரியாக, நூற்றுக்கு என்பது முதல், நூற்றுக்கு நூறு விழுக்காடு வரை மாணவர்கள் ஒவ்வொரு தேர்விலும் தேர்ச்சி பெற்று விடுகிறார்கள். இதில், 40 முதல் 50 மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெறும் மாணவர்களே அதிகம்.

மதிப்பெண் வழங்கும் முறை

ஒரு மதிப்பெண் வினாக்கள், அதிலும் அவை கொள் குறி வினாத்தாள் என்றால், அதில், எந்தவிதமான மாற்றமும் செய்ய இயலாது. அதற்கு, பூஜ்ஜியமும் அல்லது ஒரு மதிப்பெண் கொடுத்து விடுகிறார்கள். அதற்கு மேல் உள்ள, குறுவினா, நெடு வினாக்களை மதிப்பீடு செய்வதில் இரண்டு மூன்று அணுகுமுறைகளை பின்பற்றுகின்றனர் பேராசிரியர்கள். பார்த்தவுடன் மதிப்பெண் வழங்குதல். அதாவது, படித்துப் பார்க்காமலேயே மதிப்பெண் வழங்குதல். முதல் மூன்று அல்லது நான்கு வரிகளை படித்துவிட்டு மதிப்பண்ணை வழங்குதல். மேம்போக்காக கண்ணுக்கு படும் வரிகளை படித்தல் மதிப்பீடு செய்தல். முழுமையாக படித்துப் பார்க்காமலேயே மதிப்பெண் வழங்குதல். இப்படி பேராசிரியர்களின் தன்மையைப் பொறுத்து மதிப்பீடும் மாறுகிறது.

when will there be a change in assessment strategies 2

இந்த மதிப்பீட்டில் , சராசரியாக, 80 முதல் 100 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி அடைந்து விடுகிறார்கள். தேர்ச்சி அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்? எல்லா கேள்விகளுக்கும் விடை அளித்திருக்க வேண்டும். எந்த கேள்விக்கும் சரியான விடையோ, அது தொடர்பான விடையோ, பொருத்தமான விடையோ எழுத வேண்டும் என்பதில்லை. எல்லா கேள்விகளுக்கும் ஏதோ ஒரு விடை‌ எழுதியிருக்க இருக்க வேண்டும். அது எதுவாகவும் இருக்கலாம். கேள்விகளை விடையாக, திரும்பத் திரும்ப, திரும்ப எழுதி வைப்பவர்கள் இருக்கிறார்கள். ஆங்கில வழியாக இருந்தாலும், தமிழ் வழியில் எழுதும் மாணவர்கள், நிறைய பேர் இருக்கிறார்கள்.

இவர்கள், அந்தப் பாடம் தொடர்பான தமிழ் வழிகாட்டியை கொஞ்சம் படித்துவிட்டு, எழுதுவோராக இருப்பார்கள். வகுப்பறையில் கேட்டதை தொடர்பு படுத்தி, ஏதேனும் எழுதி வைப்பவர்கள்‌உண்டு. கேள்வியை ஒட்டி அவர்களுக்கு தோன்றியதை எழுதுபவர்களாக இருக்கின்றனர். உதாரணமாக, ‘வறுமை’ என்று வைத்துக் கொள்வோம். வறுமை மிகவும் கொடியது. வறுமை மிகவும் ஆபத்தானது, என்று பொத்தாம் பொதுவாக, எழுதிக் கொண்டே செல்வார்கள். இயற்பியல் மின்னணுவியல் பாடங்களில் கூட சினிமா பற்றியோ வேறு விஷயங்களைப் பற்றியோ எழுதி கொடுத்துவிட்டு வரும் மாணவர்கள் இருக்கிறார்கள். அதற்கு குறைந்தபட்சம் மதிப்பெண் கொடுத்து, தேர்ச்சி வழங்கும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.

பாடத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் கூட ,தேர்ச்சி அடைந்து விடலாம். எந்த பாடம் தொடர்பான தேர்வையும் பொத்தாம் பொதுவாக எழுதி தேர்ச்சி பெறுவது மட்டுமல்ல, தமிழில் எழுதினாலும் எண்ணிலடங்கா எழுத்துப்பிழைகள் இருந்தாலும், தேர்ச்சி அடைந்து விடுகிறார்கள். தன்னாட்சி கல்லூரிகள், ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும் என்று கட்டளையிட்டு விடுவார்கள். தமிழில் எழுதும் மாணவர்கள், அரைகுறையாக ஏதேனும் எழுதி தள்ளி விடுவார்கள். ஆங்கில வழியில் எழுதுவோர் This that is was என்று அவர்கள் மனதில் பட்டதை மூன்று மணி நேரம் எழுதிக் கொண்டே இருப்பார்கள். எப்படியும் தேர்ச்சி அடைந்து விடலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது.

பல நேரங்களில், இன்னும் நிலைமை மோசமாகி, “வரும் காலத்தில் பி ஏ, எம் ஏ என்பவர்கள் என எழுதுபவர்கள் இருக்கிறார்கள். எப்படியும் தேர்ச்சி அடைந்து விடலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. பல நேரங்களில் இன்னும் நிலைமை மோசமாகி, வரும் காலத்தில், எம் ஏ என்று சொல்வார்கள். ஆனால், எழுதப் படிக்க தெரியாதவர்களாக இருப்பார்கள், என்ற அச்சம் ஏற்படும்.

தொடர்ச்சி அடுத்த வாரம்.

கட்டுரையாளர் குறிப்பு

when will there be a change in assessment strategies 2 by N Mani

நா.மணி

பேராசிரியர் மற்றும் தலைவர் பொருளாதாரத் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ஈரோடு.

மதிப்பீட்டு உத்திகளில் எப்போது மாற்றம் வரப் போகிறது – 1

இயக்குராக அறிமுகமாகிறார் நடிகர் விஜய் மகன் சஞ்சய்

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் எப்போது?: நீதிபதி உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share