செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத் துறை கைதை தொடர்ந்து நெஞ்சுவலி காரணமாகச் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ கிராம் பரிசோதனை செய்யப்பட்டு இதயத்தில் 3 இடங்களில் அடைப்பு இருப்பதாகவும், பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.
அதுபோன்று அமலாக்கத் துறை சார்பிலான இஎஸ்ஐ மருத்துவமனையும் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதாகக் கூறியது. கடந்த 15ஆம் தேதி முதல் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இன்று (ஜூன் 20) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
“காவேரி மருத்துவமனையிடம் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறோம். நாளை அதிகாலை ஓபன் கார்ட் சர்ஜரி செய்யப்படும். செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் மூன்று ரத்த நாளங்களில் அடைப்புகள் இருந்தது ஓமந்தூரார் மருத்துவமனை பரிசோதனையில் தெரியவந்தது.
இந்த அடைப்புகளால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க பிளட் தின்னர் மருந்து கொடுக்கப்பட்டது. இந்த மருந்தை நிறுத்திவிட்டு 5 அல்லது 6 நாட்களுக்குப் பிறகு தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.
இல்லை என்றால் அதிகளவு ரத்தம் வெளியேற (bleeding complications) வாய்ப்பு ஏற்பட்டுவிடும். எனவே அறுவை சிகிச்சை செய்வதை ஒத்தி வைத்தார்கள். நேற்று இரவு அறுவை சிகிச்சை செய்வதற்கான தகுதியைச் செந்தில் பாலாஜி பெற்றிருக்கிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்படி நாளை அதிகாலை அறுவை சிகிச்சை செய்யப்படும்” என்று கூறினார்.
பிரியா
