வங்க உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (அக்டோபர் 25) குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அக்டோபர் 27ஆம் தேதி புயலாக உருவெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (அக்டோபர் 25) அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை (அக்டோபர் 26) வலுப்பெறக்கூடும். நாளை மறுநாள் அக்டோபர் 27-ஆம் தேதி காலை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் புயலாக மாறக்கூடும்” எனக் கணித்துள்ளது.

நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலுக்கு பெயர் என்ன தெரியுமா?
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி, அது ஆந்திரா நோக்கி நகரும் எனவும், அதற்கு தாய்லாந்து பரிந்துரைத்த மொந்தா (Montha) என்ற பெயர் சூட்டப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய் மொழியில் மொந்தா என்றால் ’அழகான மலர்’ என்று அர்த்தம் என்பது குறிப்பித்தக்கது.
