கடந்த நவம்பர் 24ஆம் தேதி கூடிய உச்ச நீதிமன்ற கொலீஜியம் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி உட்பட 7 நீதிபதிகளை இடமாற்றம் செய்யப் பரிந்துரைத்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து வரும் டி.ராஜாவை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.எம்.வேலுமணியை கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கும் இடமாற்றம் செய்யப் பரிந்துரைத்தது.
அதுபோன்று, ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்தையும், தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி டி நாகார்ஜுனையும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரைத்தது.
இந்த பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மொத்த பணியிடங்களான 75 இடங்களில் 72 சதவிகிதம் நிரப்பப்படும். 21 இடங்கள் காலியாக இருக்கும்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 13ஆம் தேதி பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி பொறுப்பேற்றார்.

இவர் செப்டம்பர் 21ஆம் தேதி பணி ஓய்வு பெற்றதால் பொறுப்பு தலைமை நீதிபதியாக 9 நாட்கள் மட்டுமே நீடித்தார். அதன் பிறகு டி.ராஜா தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.

இந்தச்சூழலில் செப்டம்பர் 28ஆம் தேதி உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒரிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முரளிதரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப் பரிந்துரைத்தது. ஆனால் இதற்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.

இந்நிலையில் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை, ராஜஸ்தானுக்கு இடம் மாற்றம் செய்து மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பரேஷ் உபத்யாய் பொறுப்பு வகிப்பார்.

அப்படிப் பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்கும் பரேஷ் உபத்யாய்வின் பதவி காலமும் டிசம்பர் 13ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
அதற்குள்ளும் எஸ்.முரளிதரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை எனில் அடுத்த மூத்த நீதிபதியான பி.என்.பிரகாஷ் பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்க கூடும். நீதிபதி பி.என் பிரகாஷின் பதவி காலமும் ஜனவரி 11, 2023ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

நீதிபதி பி.என் பிரகாஷின் பதவிகாலமும் முடிவடையும் பட்சத்தில், பொறுப்பு தலைமை நீதிபதியாக அடுத்த சீனியாரிட்டி படி, நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பொறுப்பேற்கக் கூடும்.
இதுபோன்று எஸ்.முரளிதரின் இடமாற்றத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காத பட்சத்தில் சென்னை உயர் நீதிமன்றம் மூன்றரை மாதங்களில் 5 பொறுப்பு தலைமை நீதிபதிகளை காண்கிறது.
நீதித்துறையில் உள்ள அதிகாரிகளின் பற்றாக்குறையே வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கான முதன்மை காரணம் என்று ஓய்வு பெறும் நாளில் முன்னாள் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தெரிவித்தார். ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நிரந்தர தலைமை நீதிபதியே இல்லாத நிலை நிலவுகிறது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எட்டு பேர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஓய்வு பெற்றார்.
அவரைத் தொடர்ந்து நீதிபதிகள் வி பார்த்திபன், வி பாரதிதாசன், ஆர் பொங்கியப்பன், எம் கோவிந்தராஜ், கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் முறையே கடந்த ஏப்ரல் 23, மே 6, மே 11, மே 18 மற்றும் மே 26 ஆகிய தேதிகளில் ஓய்வு பெற்றனர். இவர்கள் 6 பேரை தொடர்ந்து நீதிபதிகள் பண்டாரி மற்றும் துரைசாமி ஆகியோர் ஓய்வு பெற்றனர்.
ஒரிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முரளிதரின் பதவி காலம் ஆகஸ்ட் 7, 2023ல் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
