இன்று குழந்தைகளுக்கு ஸ்பெஷலாக என்ன சமைப்பது… இந்தக் கேள்வி வீட்டில் இருக்கும் குழந்தைகளை நினைக்கும்போது ரொம்பவே கவனம் பெறும். மற்ற ஸ்நாக்ஸ்களை போலல்லாமல் நிதானமாக, கொஞ்சம் ரிச்சான சமையலே பெரும்பாலும் பலரது சாய்ஸாகவும் இருக்கும்நிலையில் அப்படியோர் அருமையான, சத்தான ஸ்நாக்ஸ் இந்த கோதுமை ஓமப்பொடி.
என்ன தேவை?
கோதுமை மாவு – 200 கிராம்
கடலை மாவு – 100 கிராம்
அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்
ஓமம் – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கோதுமை மாவை இட்லிப் பானையில் 5 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுத்து ஆறியதும் மிக்ஸியில் அரைத்து வைக்கவும். ஓமத்தை நைஸாக அரைத்து வடித்துத் தண்ணீரைத் தனியே வைக்கவும். பாத்திரத்தில் கோதுமை மாவு, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கி ஓமத்தண்ணீர் ஊற்றித் தேவைக்கு மேலும் தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவுப் பதத்துக்குப் பிசைந்து வைக்கவும்.
வாணலியை அடுப்பிலேற்றி, எண்ணெய் ஊற்றி, காய்ந்த பிறகு பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக்கி ஓமப்பொடி அச்சில் போட்டுப் பிழிந்து மிதமான தீயில் நன்கு வேகவிட்டுப் பொன்னிறமானதும் எடுக்கவும். விருப்பப்பட்டால் ஆறியதும் நொறுக்கி மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு கலந்து சாப்பிடலாம்.