தேர்தலில் வென்றால் மக்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் என்ன செய்ய போகிறது என்பது குறித்து தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தனது அரசியல் பிரச்சார சுற்றுப்பயணத்தை திருச்சியில் இன்று (செப்டம்பர் 13) தொடங்கியுள்ளார் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்.
அதன்படி திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை 9.45 மணியளவில் வந்திறங்கிய அவர், தொண்டர்கள் சூழ சுமார் 5 மணி நேர பயணத்திற்கு பிறகு மதியம் 3 மணியளவில் மரக்கடை பகுதியை வந்தடைந்தார்.
அப்போது திருச்சியை திருப்புமுனை என்று குறிப்பிட்ட விஜய், திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது குறித்தும், திருச்சிக்கு அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாத திட்டங்கள் குறித்தும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து அவர் தேர்தலில் வென்றால் தமிழக வெற்றிக் கழகம் என்ன செய்யும் என்பது குறித்தும் பேசினார்.
அவர், “அதை செய்கிறோம் இதை செய்கிறோம் என பொய்யான வாக்குறுதிகளை கொடுக்க மாட்டோம். எது சாத்தியமோ, எது உண்மையோ அதை மட்டுமே கொடுப்போம்.
சட்டம், கல்வி, ரேசன், மருத்துவம், சாலை வசதி, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளில் எந்த சமரசமும் கிடையாது. அதே போன்று பெண்கள் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பில் எந்த சமரசமும் கிடையாது” என விஜய் தெரிவித்தார்.
