தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவுக்கு (ஹெச்.ராஜா) திடீர் என ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் NDTV தொலைக்காட்சி நிறுவனம் ”Tamil Nadu Summit” நிகழ்ச்சியை இன்று ஜனவரி 30-ந் தேதி நடத்தியது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசும் போது, அரங்கில் அமர்ந்திருந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, கை தட்டி உற்சாகத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது அனைவரது கவனத்தையும் பெற்றது.
இதன் பிறகு, அதே நிகழ்வு அரங்கில் திமுகவின் சேலம் நிர்வாகி பரணீதரனுக்கும் எச்.ராஜாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் நடந்து கொண்டிருந்த போதே திடீரென எச்.ராஜா மயக்கமடைந்து கீழே சரிந்து விழுந்தார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
அதே நிகழ்வு அரங்கில் இருந்த மற்றொரு பாஜக மூத்த தலைவரான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜாவின் உடல்நிலையை பரிசோதனை செய்து, “அதிக ரத்த அழுத்தத்தால்” மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என கூறினார். இதனையடுத்து எச்.ராஜாவை அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் அங்கிருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு எச்.ராஜா அழைத்துவரப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எச். ராஜாவுக்கு “Stroke” ஏற்பட்டிருக்கக் கூடும் என்றும் அவருக்கு ”மூளையில் பாதிப்பு” ஏற்பட்டுள்ளதா? என்றும் மருத்துவர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இத்தகவல் அறிந்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் கேசவ விநாயகம் உள்ளிட்டோர் அப்பலோ மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.
