பட்டாசு ஆசை – விபத்தில் சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்… சேலத்தில் நடந்தது என்ன?

Published On:

| By vanangamudi

What happened in the Salem firecracker accident

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில் நடந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். What happened in the Salem firecracker accident

கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக முறையான பராமரிப்பு எதுவும் இல்லாமல் இருந்து வந்தது. இதனால் அங்கு நடைபெறும்  18 நாள் திருவிழா பல ஆண்டுகளாக நடக்கவில்லை. 

இந்தநிலையில்  ஊர்பிரமுகர்கள் ஒன்று சேர்ந்து கடந்த ஆண்டு குடமுழுக்கு விழா நடத்தினர். இதைத் தொடர்ந்து ஒவ்வொருஆண்டும் திருவிழா நடத்தவும் முடிவு செய்தனர்.

அதன்படி, இந்த ஆண்டு திருவிழா நடைபெற்றது. இதில், மகாபாரதக் கதையில் இடம்பெறும் 18 நாட்கள் நடைபெறும் போர்க் காட்சிகளை, கோயில் முன் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் இரவு நேரம் தெருக்கூத்து மூலம் விளக்கிக் காட்டினர்.

அம்மனுக்கு சீர்வரிசை

தொடர்ந்து நேற்று முன்தினம் ஏப்ரல் 25 ஆம் தேதி 15ஆம் நாள் நிகழ்வாக, திரௌபதி அம்மனுக்குக்கு திருமணம் நடக்க இருந்தது. இதற்கு முன்பாக அண்ணன் வீட்டிலிருந்து சீர்வரிசை கொண்டுசெல்லும் நிகழ்வு நடந்துள்ளது.

இந்த நிகழ்வுக்கு கஞ்சநாயக்கன்பட்டி, பூசாரிப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள், திரண்டு வந்து ஊர்வலமாக திரௌபதி அம்மன் கோயிலுக்குச் சென்றனர். இந்த நிகழ்வு இரவு எட்டு மணிக்கு நடந்தது.

அதன் பின்னர், இரவு 9 மணிக்குமேல், திரௌபதியின் வம்சத்தை சேர்ந்த பங்காளிகள் எனச் சொல்லப்படும் ஒரு பிரிவினர், சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க. தலைவர் மாணிக்கம் தலைமையில் சுமார் 200 பேர் பூசாரிப்பட்டியிலிருந்து மீண்டும் ஊர்வலமாக சீர்வரிசைகளுடன் புறப்பட்டு வந்தனர். 

இந்த விழா ஏற்பாடுகள் அனைத்தையும் மாணிக்கமே முன்னின்று செய்திருக்கிறார். 

மேள, தாளத்துடன் ஊர்வலம் செல்லும்போது வெடிகள் வெடிக்கவும் 2  லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசு மற்றும் வெடி பொருட்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டன

வெடிபொருட்களை செல்வராஜ் என்பவர் ஒரு ஸ்கூட்டியில் அடுக்கி வைத்துக்கொண்டு, ஊர்வலத்தின் முன்பாக சென்றார்.
இதில் நாட்டு வெடி வகையைச் சேர்ந்த தேங்காய் வெடி என்ற வெடிகள் அதிகமாக இருந்துள்ளன.

தேங்காய் வெடி

இந்த வெடிகள் தேங்காய் வடிவில் தயாரிக்கப்பட்டிருக்கும். இந்தக் குண்டுகளை வெடிக்க வைக்க 6 அங்குலம் சுற்றளவும், ஐந்து அடி நீளமுள்ள ஒரு இரும்பு பைப் தேவைப்படும். இதன் கீழே தரையில் சாயாமல் நிற்க வசதியாக ஒரு ஸ்டேண்டும் பொருத்தப்பட்டிருக்கும். இந்த பைப்பின் மேலிருந்து தேங்காய் வெடியை உள்ளே போட்டு, வெடியின் கீழ்ப் பகுதியில் உள்ள திரியில் நெருப்பு வைக்கும்போது, வெடி வெடித்து ஐம்பதடி உயரத்துக்கு மேலே சென்று வெடித்து, பூமழை போல வெளிச்சத்தை ஏற்படுத்தும்.

தேங்காய் வெடி வெடிக்கும்போது அந்த பைப் பெரிய அதிர்வை ஏற்படுத்தும். பெரும்பாலும் இந்த வெடியை வெடிக்க வைக்கும்போது மண் தரையில்தான் வைத்து வெடிக்க வைக்க வேண்டும். அப்போதுதான், பைப்பின் அதிர்வுமண் தரைக்குள் சென்று விடும். தார்ரோடு, சிமெண்டு தரையில் வைத்து வெடி வெடிக்கும்போது ஏற்படும் அதிர்வினால், பைப் சாய்ந்து, கீழே விழுந்துவிடவும், பக்கத்தில் இருப்போருக்கு ஆபத்து ஏற்பட  வாய்ப்பும் உள்ளது.

நேற்று முன்தினம் இரவு திரௌபதி அம்மன் சீர்வரிசை ஊர்வலத்தின்போது, இந்த தேங்காய் வெடிகளை லோகேஷ் என்கிற லோகநாதன் (வயது-23) வெடித்துக்கொண்டு சென்றார். அவருடனே, ஸ்கூட்டியில் வைத்திருந்த வெடிகளுடன் செல்வராஜ் (வயது-29) ஊர்வலத்தினருக்கு முன்பாக, நூறு அடித் தூரத்தில் சென்றுகொண்டிருந்தார். அதுபோன்று, அவர் ஊசிப் பட்டாசு வகையை சேர்ந்த பட்டாசு சரங்களை தனது தோளில் போட்டுக்கொண்டு, தேவைப்படும் இடங்களில் பட்டாசுகளை எடுத்து எடுத்து லோகேஷிடம் கொடுத்துக்கொண்டேசென்றார்.

பட்டாசுக்காக பறிபோன உயிர்

“இந்தப் பட்டாசுகளை எங்களுக்கும் கொடுங்கள். நாங்களும் ஊர்வலத்தின் முன்பாகப் போய் வெடிக்கிறோம்” என்று 11 வயது சிறுவர்களான கார்த்திகேயன், தமிழ்செல்வன் இருவரும் செல்வராஜிடம் கேட்டுள்ளனர். அவர்களுக்கு பட்டாசு கொடுக்காமலே, “இன்னும் கொஞ்சம் தூரம் போகட்டும். இன்னும் கொஞ்சம் தூரம் போகட்டும்…’ என்று செல்வராஜ் சொல்லிகொண்டே சென்றுள்ளார்.

நமக்கும் வெடிப்பதற்குப் பட்டாசு கொடுப்பார் என்ற நம்பிக்கையில் சிறுவர்கள் இருவரும் வெடி பொருள்கள் வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டிக்குப் பக்கத்திலேயே சென்றனர்.

இந்த நிலையில், பூசாரிப்பட்டியின் ஊர் எல்லையில் ஓரிடத்தில் தேங்காய் வெடியை வைத்து வெடிக்க வைக்க லோகேஷ் சாலையின் நடுவே பைப் ஸ்டாண்டை வைத்து, வெடியை உள்ளே போட்டு நெருப்பு வைக்க முயற்சி செய்தார். அப்போது, வலது பக்கத்திலிருந்த வீட்டைச் சேர்ந்த ஒரு பெண், “இங்கே வெடி வைக்க வேண்டாம். வெடி வெடித்தால் எங்க வீடு சேதமாகும் என்று ” என்று சொல்லியுள்ளார்.

உடனே அங்கிருந்து 20 அடி தூரம் தள்ளி, சாலையின் இடதுபக்கம் கொண்டுபோய் பைப் ஸ்டாண்டை வைத்து, வெடியை வெடிக்க வைத்துள்ளார். பைப்பிலிருந்து வெளியேறிய தேங்காய் வெடி, மேலே செல்லும்போது, மேலே சென்றுகொண்டிருந்த மின் கம்பியில் பட்டு, அதை அறுத்துக்கொண்டு, திசைமாறி கீழே திரும்பிய தேங்காய் வெடி, லோகேஷ்க்கு வெடி சப்ளை செய்துகொண்டு ஸ்கூட்டியில் நின்ற செல்வராஜ் மீது விழுந்து வெடித்தது. அவர் கழுத்தில் மாலையாப் போட்டிருந்த பாட்டாசு, ஸ்கூட்டியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வெடி பொருள்கள் எல்லாம் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின.

இதில் செல்வராஜும், நமக்கும் பட்டாசு கொடுப்பார் என்ற நம்பிக்கையில், ஸ்கூட்டிக்கு பின்னாலே சென்றுகொண்டிருந்த கார்த்திகேயன், தமிழ்செல்வன் ஆகிய சிறுவர்களும்  நிகழ்விடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். வெடி வைத்துக் கொண்டிருந்த லோகேஷ் மிக மோசமான காயங்களுக்கு உள்ளானார்.

இந்த இடத்திலிருந்து நூறடி தொலைவில் ஊர்வலத்தில் வந்துகொண்டிருந்த சிலருக்கும், அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த தினேஷ் பிரபு, நவீன் பிரபு ஆகிய இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த தீவட்டிப்பட்டி போலீசார், வெடி விபத்தில் காயமடைந்தவர்களை, சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  சேலம் மாவட்ட ஆட்சியர்,பிருந்தா தேவியும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கவுதம் கோயலும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டுச் சென்றனர்.

சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த லோகேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.

உயிரிழந்த நான்கு பேருமே வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள். சிறுவன் கார்த்திகேயனுக்கு நான்கு சகோதரிகள், இவர் ஐந்தாவதாகப் பிறந்தவர். லோகேஷ், செல்வராஜ் இருவருமே திருமணம் ஆகாதவர்கள். உடல் சிதறிய மூன்று பேரின், உடல் பாகங்கள் சனிக்கிழமை மதியம் வரை அந்தப் பகுதியில் இருந்த பல வீடுகளின் மேலே கிடந்ததை அந்தப் பகுதி மக்கள் சேகரித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பாமக பிரமுகர் தலைமறைவு

இந்தநிலையில் திரௌபதி அம்மன் சீர்வரிசை ஊர்வலத்தை ஏற்பாடு செய்த பா.ம,க. மாவட்டத் தலைவர் மாணிக்கமும், அவரது ஆதரவாளர்களும் தலைமறைவாகி விட்டனர். கஞ்சநாயக்கன்பட்டி திரௌபதி அம்மன் கோயில் திருவிழா எந்தத் தடையுமில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கஞ்சநாயக்கன்பட்டி ஊர்கவுண்டர் இராஜேந்திரன், “எங்க ஊர் திரௌபதி அம்மன் திருவிழாவில் நேற்று முன்தினம் 20,000 மக்கள் கலந்துகொண்ட ‘வள்ளி கும்மி’ நிகழ்ச்சி நடந்தது. வந்திருந்த எல்லோருக்கும் அன்னதானமும் கொடுத்தோம். திரௌபதி அம்மன் திருமண நிகழ்வுக்கு, பூசாரிப்பட்டியைச் சேர்ந்த வீரக்காரன் குடும்பத்தினர் சீர்வரிசை கொண்டு வருவது வழக்கம்.

சமீப காலமாக வீரக்காரன் பங்காளிகளுக்குள் இரண்டு குழுக்களாக இருக்கின்றனர். ஒரு குழுவினர் வழக்கம்போல, பூசாரிப்பட்டி கோயில் வீட்டிலிருந்து ஊர்வலமாக கிளம்பி எங்க ஊர் கோயிலுக்கு வந்து சீர் வரிசை கொடுப்பார்கள். டாக்டர் மாணிக்கம் தரப்பிலான இன்னொரு குழுவினர், தங்களுடைய சீர்வரிசையை நேராக கோயிலுக்கே கொண்டுவந்து கொடுத்து விடுவார்கள்.

இந்த ஆண்டு டாக்டர் மாணிக்கம், தன்னுடைய செல்வாக்கை காட்டவேண்டும் என்பதற்காக பெரிய கூட்டத்தை திரட்டிக்கொண்டு ஊர்வலமாக வந்துள்ளார். போதிய பயிற்சியும், முறையான அனுமதியும் இல்லாத இரண்டு பேரை வெடி வைக்க ஏற்பாடு செய்துள்ளார். அவர்கள் தரையில் வைத்த வெடி, மேலே சென்ற மின் கம்பியில் பட்டு திரும்பி கீழே வந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அநியாயமாக நான்கு உயிர்கள் பலியாகிவிட்டன.

இதனால், அதிகாலை நான்கு மணிக்குத் தொடங்கும், திரௌபதி அம்மன் திருமண நிகழ்ச்சி, கொஞ்சம் தாமதமாக தொடங்கி, ஆறு மணிக்கு முடிந்தது” என்றார்

இது எதிர்பாராமல் நடந்த விபத்து என்ற அடிப்படையில்தான் தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உண்மை நிகழ்வுகளை காட்டினால், அனுமதியில்லாமல் தேங்காய் வெடி தயாரித்தவர்கள், விற்பனை செய்தவர்கள், ஊர்வலம் ஏற்பாடு செய்த மாணிக்கம் உள்ளிட்ட பலரை வழக்கில் சேர்க்கவேண்டி வரும்.

தன்னுடைய அரசியல் பலத்தையும், செல்வாக்கையும் ஊர்மக்களுக்குக் காட்டுவதற்காக தேவையில்லாமல் ஓர் ஊர்வலத்தை மாணிக்கம் ஏற்பாடு செய்துள்ளார். முன்னேற்பாடு இல்லாமல் நடந்த இந்த போட்டி ஊர்வலத்தால் இரு சிறுவர்கள் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்திருப்பது அந்தப் பகுதி மக்களிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் நடக்கும் பெரும்பாலான கோயில் விழாக்களிலும் நாட்டு வெடிகள் வெடிப்பது வாடிக்கையான நிகழ்வாக நடந்து வருகிறது. இதை காவல்துறை தடுத்து நிறுத்தாதவரை உயிரிழப்புகளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share