நான் முழு உடல் ஆரோக்கியத்துடன் வருவேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வீடியோ வெளியிட்டுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவரது கலிங்கப்பட்டி வீட்டில் தவறி விழுந்ததில் இடது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.
இந்நிலையில், நேற்றிரவு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
தனது உடல் நலம் குறித்து பேசி பதிவு செய்த அந்த வீடியோவை இன்று (மே 29) காலை முகநூலில் வெளியிட்டுள்ளார்.
அவர் பேசுகையில், “ தமிழகத்தில் பொது வாழ்வில் ஈடுபடுகின்ற சாதாரண தொண்டன் ஆகிய இந்த வைகோ 7,000 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டுள்ளேன். ஆனால், கீழே விழுந்ததில்லை.
நான்கு நாட்களுக்கு முன்பு நெல்லைக்கு சென்றிருந்த இடத்தில் நான் தங்கியிருந்த வீட்டில் படி வழியாக செல்லாமல், அருகிலிருந்த திண்ணை மீது ஏறினேன். அப்போது இடது பக்கமாக சாய்ந்துவிட்டேன்.
எனக்கு தலை அல்லது முதுகு பகுதியில் அடிபட்டு இருந்தால் இயங்க முடியாமல் போயிருப்பேன். இப்போது இடது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.
உடனே அங்குள்ள மருத்துவர் முரளியிடம் காண்பித்தேன். அவர் உடனே சென்னை போக சொன்னார். அதன்பிறகு மருத்துவர் தனிகாசலத்திடமும் ஆலோசனை கேட்டேன். அவருக்கு எனது எக்ஸ்ரேவை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்தேன்.
அவர் பயப்பட வேண்டாம். உங்களுக்கு ஓய்வு தேவை, அது கிடைத்திருக்கிறது என்றார்.
எனக்கு தோள்பட்டை பகுதியில் எலும்பு 2செமீ அளவுக்கு உடைந்திருக்கிறது. அதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஆகவே நான் நன்றாக உள்ளேன். முழு ஆரோக்கியத்துடன் வருவேன். முன்பு போல இயங்க முடியுமா என்று மட்டும் யாரும் சந்தேகப்பட வேண்டாம்.
உழைப்பு என்பதற்கு இலக்கணமாக இருக்கக் கூடியவர் வைகோ என்று கலைஞரே சொல்லியிருக்கிறார். எனக்காக கவலை கொண்டுள்ளவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
