அதிமுக விதிகள் சொல்வது என்ன? – நீதிபதிகளிடம் ஈபிஎஸ் விளக்கம்!

Published On:

| By Kalai

What do ADMK rules say Pointing to the judges

அதிமுக விதிகள்படி யார் யாருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பதை சுட்டிக்காட்டி எடப்பாடி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வாதங்களை வைத்து வருகிறது.

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

இன்று(ஜனவரி 10) இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி தரப்பு தனது வாதங்களை தொடங்கியது.

அதன்படி, 1972 ஆம் ஆண்டு முதல் கட்சியின் 2017 ஆம் ஆண்டு வரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்களே பொதுச்செயலாளரை தேர்ந்தெடுத்து வந்தனர். எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா கட்சிக்கு தலைமை ஏற்றார்.

அவர் மறைவுக்குப் பிறகு கட்சியின் தலைமையில் மாற்றம் செய்ய வேண்டி இருந்தது. கட்சிக்கு தலைமை ஏற்க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டன.

இரு பதவிகளும் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்று விதி மாற்றப்பட்டது. 2021 ஆம் ஆண்டு கட்சியின் விதிகள் செயற்குழுவால் திருத்தப்பட்டது.

செயற்குழு மேற்கொள்ளும் திருத்தத்துக்கு பொதுக்குழு அங்கீகாரம் அளிக்கவேண்டும். இரட்டை தலைமையில் ஏற்பட்ட குழப்பத்தால் ஒற்றை தலைமை தேவைப்பட்டது. கட்சியின் நலன் அடிப்படையில் இந்த விவகாரத்தை அணுகவேண்டும்.

கட்சிக்கு மீண்டும் ஒற்றை தலைமை வேண்டும் என்பது எப்படி கட்சி நலனுக்கு எதிராகும். அதிமுகவில் பொதுக்குழுவுக்கே அதிகாரம் என்பது கேள்விக்கு உட்படுத்தப்படவில்லை.

இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு தவறு என்றால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு மட்டும் எப்படி சரியாகும்?. கட்சியின் 5 ஆம் விதி அடிப்படை உறுப்பினரை வரையறுக்கிறது.

பொதுக்குழு முடிவுகளை ஏற்கும் நபரே அடிப்படை உறுப்பினராக இருக்க முடியும் என்று 7 ஆம் விதி கூறுகிறது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் அனைவரும் பொதுக்குழு முடிவுக்கு கட்டுப்பட்டவர்கள்.

கட்சியின் 19(1) ஆம் விதி பொதுக்குழுவில் யாரெல்லாம் இடம்பெறவேண்டும் என்று கூறுகிறது. 43 ஆவது விதி கட்சியின் விதிகளை திருத்தம் செய்வதற்கு அதிகாரம் அளித்துள்ளது.

கட்சியின் உச்சபட்ச அதிகாரம் பொதுக்குழுவுக்கே என்பதை விதி தெளிவுப்படுத்துகிறது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தை வைத்துள்ளது.

கலை.ரா

“பதவிகளை நீக்க அதிகாரம் உண்டு” –  வாதத்தை தொடங்கிய ஈபிஎஸ்

ஆஸ்கர் விருது : இன்ப அதிர்ச்சி கொடுத்த காந்தாரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share