அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாளை சட்டப்பேரவை கூட இருக்கும் நிலையில் இன்று (அக்டோபர் 16 ) மாலை இந்த கூட்டம் நடைபெற்றது.
இதில் அதிமுக மூத்த நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தை முன்னிட்டு மாலை தலைமை அலுவலகத்துக்கு வந்த இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மலர்தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளுமான ஜெயக்குமார் , ஆர்.பி.உதயகுமார், வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், கே.சி.கருப்பணன், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்நிலையில், கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,
“50 ஆண்டுகள் முடிந்து 51ஆம் ஆண்டில் அதிமுக அடி எடுத்து வைக்கிறது. நாளை எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெறும் நிகழ்சியில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார். அதுபற்றி விவாதித்தோம்” என்று கூறினார்.
நாளை நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அதிமுக பங்கேற்குமா என்ற கேள்விக்கு “ அதை பற்றி எந்த ஆலோசனைகளும் இன்று நடைபெறவில்லை. அது பற்றி சட்டமன்ற அதிமுக கட்சி முடிவு எடுக்கும்” என்று தெரிவித்தார்..
63 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில், விதி, மரபு , மாண்பு ஆகியவற்றை கடைபிடித்து மாண்புமிக்கவராக சட்டபேரவைத் தலைவர் இருப்பார் என்றும் தெரிவித்தார்.
மாநில அரசின் திட்டங்களை மத்திய அமைச்சர்கள் 76 பேர் ஆய்வு செய்வார்கள் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர் “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பது தான் அதிமுகவின் நிலைப்பாடு” என்றார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட புதுமணத் தம்பதி!
தீபாவளி ஷாப்பிங்:மக்கள் வெள்ளத்தில் தி நகர்! போலீஸ் தீவிர கண்காணிப்பு!
