அண்ணாமலை பேசுவது ஜமக்காளத்தில்‌ வடிகட்டிய பொய்‌: துரைமுருகன்

Published On:

| By christopher

Annamalai speaks is a lie

திமுக அரசு மற்றும் கலைஞர் குறித்து அண்ணாமலை கூறியது ஜமக்காளத்தில்‌ வடிகட்டிய பொய்‌  என்று அமைச்சர் துரைமுருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் இன்று (செப்டம்பர் 23) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின்‌ மாநில தலைவர்‌ அண்ணாமலை திராவிட முன்னேற்றக்‌ கழக ஆட்சியின்‌ மீது ஒரு குற்றச்சாட்டு வைத்திருப்பதை இன்று வெளிவந்த ‘இந்து தமிழ்த்திரை’ நாளிதழ்‌ ஒரு செய்தியாக வெளியிட்டிருக்கிறது.

“தமிழகத்தை 9 ஆண்டுகள்‌ ஆட்சி செய்த காமராஜர்‌ விவசாயத்தை பாதுகாக்க 12 அணைகளை கட்டினார்‌. ஆனால்‌, ஆறாவது முறையாக ஆட்சி செய்யும்‌ திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌
5 அணைகளை மட்டுமே கட்டியுள்ளது” என்று ஒரு தவறான குற்றச்சாட்டை அண்ணாமலை திமுக மீது சுமத்தி இருக்கிறார்‌.

நித்தம்‌ நித்தம்‌ இப்படிப்பட்ட உண்மைக்கு மாறான செய்திகளை பேசி வம்பில்‌ மாட்டிக்‌ கொள்வதை நண்பர்‌ அண்ணாமலை வழக்கமாக்கிக்‌ கொண்டிருக்கிறார்‌. அதில்‌ ஒன்று தான்‌ இந்த தவறான குற்றச்சாட்டு.

பெருந்தலைவர்‌ காமராஜர்‌, கிருஷ்ணகிரி அணை, சாத்தனூர்‌ அணை, வைகை அணை, மணிமுத்தாறு அணை போன்ற அணைகளை கட்டினார்‌ என்பதில்‌ மாறுபட்ட கருத்தில்லை.

ஆனால்‌, கழக ஆட்சியில்‌ 5 அணைகளை மட்டுமே கட்டினார்கள்‌ என்று அண்ணாமலை சொல்வது ஜமக்காளத்தில்‌ வடிகட்டிய பொய்‌.

நம்பியாறு அணை – பொய்கையாறு அணை – கொடுமுடியாறு அணை – கடானா அணை – இராமநதி அணை – பாலாறு – பொருந்தலாறு அணை – மருதாநதி அணை – பரப்பலாறு அணை –

வடக்கு பச்சையாறு அணை – பிளவுக்கல்‌ அணை – மோர்தானா அணை – அடவிநயினார்‌ அணை – ராஜாதோப்பு அணை- ஆண்டியப்பனூர்‌ ஓடை அணை – சாஸ்தா கோயில்‌ அணை –

குப்பநத்தம்‌ அணை – இருக்கன்குடி அணை – செண்பகத்தோப்பு அணை – நங்காஞ்சியார்‌ அணை – நல்லதங்காள்‌ ஓடை அணை – மிருகண்டாநதி அணை – வரதாமநதி அணை – வரட்டாறு வள்ளிமதுரை அணை இப்படி 40 க்கும்‌ மேற்பட்ட அணைகளை கட்டியது கலைஞர்‌ தலைமையிலான திராவிட முன்னேற்றக்‌ கழக ஆட்சி.

ஆளுங்கட்சியின்‌ மீது எதிர்க்கட்சி குற்றம்‌ குறைகளை சொல்வது தவறில்லை. ஆனால்‌, அவ்வாறு சொல்வதற்கு முன்‌, சொல்கிற குற்றச்சாட்டு உண்மையா என்பதை ஒரு முறை பரிசீலனை செய்து பார்த்துக்‌ கொள்ள வேண்டும்‌.

என்னுடைய நீண்டகால அனுபவத்தில்‌ நண்பர்‌ அண்ணாமலைக்கு நான்‌ சொல்கிற ஒரு யோசனையாகும்‌. இல்லாவிட்டால்‌, அவர்‌ கூறும்‌ குற்றச்சாட்டு யாவும்‌ புஸ்வானமாகிவிடும்‌.” என்று துரைமுருகன்‌ அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

உங்க ஊர்ல அடிப்படை பிரச்சினையா? உடனே தீர்க்க ’ஊராட்சி மணி’க்கு போன் பண்ணுங்க!

“தமிழ் உரிமைக்காக போராடியவர் சிலம்பொலியார்” – ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share