சூப்பர் 4 சுற்றில் நடைபெற உள்ள இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்தில் இம்முறை வெற்றி எங்களுக்கு தான்” என்று பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான ஆசியக் கோப்பைத் தொடர் ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தானின் முல்தானில் தொடங்கியது. இம்முறை ஆசிய கோப்பைத் தொடரில், தொடரை நடத்தும் அணிகளான இலங்கை மற்றும் பாகிஸ்தானுடன் இந்தியா, வங்காள தேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் என மொத்தம் 6 அணிகள் களமிறங்கியுள்ளன.
லீக் போட்டிகளின் முடிவில் ஆசிய கோப்பைத் தொடரில் முதன்முறையாக களமிறங்கிய நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் வெளியேறின.
அதனைத்தொடர்ந்து கடந்த 6ஆம் தேதி முதல் சூப்பர்4 சுற்று துவங்கியுள்ளது. இதன் முதல் போட்டியில் பாகிஸ்தான் – வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய வங்காளதேசம் அணி 38.4 ஓவர்களில் 193 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 39.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
வெற்றி பாகிஸ்தானுக்கு தான்!
போட்டிக்கு பின் பேட்டியளித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், “இன்றைய ஆட்டத்தின் போது அதிக வெப்பம் இருந்தது. இதனால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தான் அதிக நன்றி கூற வேண்டும். முதலில் ஷாகின் அப்ரிடிக்கும், இரண்டாவது ஹாரிஸ் ராஃப்-க்கும் நன்றி கூற வேண்டும்.
இந்த ஆடுகளத்தை பார்த்த பின் தான் ஃபஹீமை பயன்படுத்தலாம் என்று முடிவு செய்தோம். பிட்சில் கொஞ்சம் புற்கள் இருந்ததால், அவரை பயன்படுத்தினோம். நாங்கள் எப்போதும் லாகூரில் விளையாடினாலும், ரசிகர்கள் ஆதரவு நன்றாக இருக்கும். வங்கதேச அணியுடனான வெற்றி எங்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் அணி எப்போதும் ஒரு பெரிய ஆட்டத்திற்காக தயாராகத்தான் உள்ளது. இந்தியாவுக்கு எதிரான எங்களது அடுத்த சூப்பர் 4 ஆட்டத்தில் 100 சதவிகித திறனையும் வெளிப்படுத்தி வெற்றிபெற முயற்சிப்போம். இந்த தடவை வெற்றி பாகிஸ்தானுக்கு தான்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
ஆசியக்கோப்பைத் தொடரில் 6 அணிகள் மோதினாலும் ரசிகர்களால் மிகவும் முக்கியமாக எதிர்பார்க்கப்படுவது, இந்தியா பாகிஸ்தான் மோதல் தான்.
வழிவிடுமா மழை?
இந்தியாவும் பாகிஸ்தானும் லீக் சுற்று, சூப்பர் 4 போட்டி மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதமுடியும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது.
இதில் ஏற்கனவே இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் அளவிலான போட்டி மழையால் பாதிப்படைந்ததால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், சூப்பர்4 சுற்றிலாவது இரு அணிகள் இடையேயான போட்டியைக் காண முடியுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இரு அணிகள் இடையேயான சூப்பர் 4 சுற்று போட்டி வரும் 10ஆம் தேதி இலங்கையில் உள்ள கொழும்பு பிரேமதேசா மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு துவங்கவுள்ளது.
இதற்கிடையே இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறும் நாளில், கொழும்புவில் 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இலங்கை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் இந்தியா அணிக்கு எதிரான போட்டி குறித்து பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ள கருத்துகள் இந்திய ரசிகர்களிடம் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா