திமுகவின் உட்கட்சித் தேர்தல் நடந்து முடிந்து அதன் உச்சகட்டமாக தலைமை கழக நிர்வாகிகள் தேர்தலும் நடந்து முடிந்து, கடந்த அக்டோபர் 9ஆம் தேதி பொதுக்குழுவும் முடிந்துவிட்டது.
இந்த நிலையில் இன்று (டிசம்பர் 8) தென்காசி சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் வாகனத்திற்கு அருகே… தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட செல்லதுரையின் ஆதரவாளர்கள் முழக்கமிட்டிருக்கிறார்கள்.
இதன் மூலம் தென்காசி வடக்கு பஞ்சாயத்து இன்னும் முடியவில்லை என்றே தெரிகிறது.
கடந்த உட்கட்சித் தேர்தலில் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் தொடர அனுமதிக்கப்பட்டனர். மாற்றப்பட்ட சில மாவட்ட செயலாளர்களில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லதுரையும் ஒருவர்.
அவர் மீதான அரசியல் ரீதியான மற்றும் தனிப்பட்ட புகார்களால் அவர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்டார்.
இதை எதிர்த்து உட்கட்சி தேர்தலின் போதே கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயத்திலேயே அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்போது திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன் பிறகு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் பதவி நிரப்பப் படாமலேயே இருந்தது.
இந்த பின்னணியில் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக திமுக பொதுச்செயலாளர் அறிவித்தார். இதைக் கேட்டு செல்லதுரை ஆதரவாளர்கள் கோபமடைந்தனர்.
இந்த சூழலில் அரசு விழாவுக்காக டிசம்பர் 7 ஆம் தேதி சென்னையில் இருந்து ரயிலில் புறப்பட்டு 8 ஆம் தேதி காலை தென்காசி வந்தார் முதல்வர் ஸ்டாலின்.
அரசு விழா முடிந்து கடையநல்லூர் வழியாக அவர் மதுரை திரும்பிய போது முதல்வரின் வாகனத்திற்கு அருகே திரண்ட திமுகவினர், ’வேண்டும் வேண்டும் செல்லதுரை வேண்டும்’ என்று சில நிமிடங்கள் தொடர்ந்து முழக்கம் முழுப்பினார்கள். அவர்களின் முழக்கம் முதல்வர் ஸ்டாலின் காதுகளிலும் விழுந்தது.
அதற்குள் மனு கொடுக்க பலரும் முண்டியடித்தனர். அப்போதும் செல்லதுரை வேண்டும் என்ற முழக்கங்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன.
-வேந்தன்
மோடி கபடி லீக்: பணத்தை சுருட்டினாரா அமர் பிரசாத் ? வீடியோ புகார்!
டிஜிட்டல் திண்ணை: திமுகவினர் குடும்பத்துக்கு வேலை – ஸ்டாலின் போட்ட உத்தரவு!