அட்டகாச அப்டேட்டை கொடுத்த ட்விட்டரின் புதிய சிஇஓ

Published On:

| By Monisha

அனைவரும் இணைந்து ட்விட்டர் 2.0-ஐ உருவாக்குவோம் என்று ட்விட்டரின் புதிய சிஇஓ-வாக பொறுப்பேற்கும் லிண்டா யாக்கரினோ அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி இருந்தார். பயனர்கள் தங்களது கருத்துகளை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் இந்த தளத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அவர் செய்தார்.

ADVERTISEMENT

பயனர்களுக்கு சந்தா கட்டணம் தொடங்கி ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது என அவரது நடவடிக்கைகள் நீண்டன.

இந்த நிலையில் கடந்த மே 12ஆம் தேதி ட்விட்டருக்கு புதிய சிஇஓ-வைத் தேர்வு செய்துவிட்டதாகவும், அவர் பெயரைக் குறிப்பிடாமல் அவர் ஒரு பெண் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ADVERTISEMENT

மேலும், இன்னும் ஆறு வாரங்களில் அவர் தன் பணியைத் தொடங்கவுள்ளதாகவும், அதன்பின், சிஇஓ பதவியை அவரிடம் ஒப்படைத்துவிட்டு, தான் ட்விட்டரைப் பின்னிருந்து நிர்வகிக்கவுள்ளதாகவும் கூறியிருந்தார்.

இதையடுத்து ‘அந்த நபர் யாராக இருக்கக்கூடும்’ என்பது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியிருந்தது.

ADVERTISEMENT

இதில், பலரும் எதிர்பார்த்தபடியே லிண்டா யாக்கரினோ ட்விட்டரின் புதிய சிஇஓ-வாக இன்னும் ஆறு வாரங்களில் பொறுப்பேற்கவுள்ளார். இதையடுத்து ட்விட்டரின் புதிய சிஇஓ-வாக பொறுப்பேற்கும் லிண்டா யாக்கரினோவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

அதேசமயம் ட்விட்டரில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்த வந்த எலான், பல்வேறு விமர்சனங்களுக்குப் பிறகு தனது சிஇஓ பதவியிலிருந்து விலகியுள்ளார்.

இதைத்தொடர்ந்து புதிதாகப் பொறுப்பேற்கும் லிண்டா யாக்கரினோ சிறப்பாகச் செயல்படுவாரா இல்லை எலானின் திட்டத்தை நிறைவேற்றுபவராக இருந்து பழைய நிலையைத் தொடருவாரா எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் லிண்டா யாக்கரினோ, “பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் மஸ்க்கின் ஆக்கபூர்வமான சிந்தனைகளாலும், செயல்களாலும் மிகவும் ஈர்க்கப்பட்டிருக்கிறேன்.

அவருடைய இந்த ஆக்கபூர்வமான சிந்தனைகளை ட்விட்டரில் செயல்படுத்தவும், இந்த பிசினஸை சிறப்பாக மாற்றவும் எலானுடன் இணைந்து பணியாற்ற ஆர்வத்துடன் இருக்கிறேன்.

இந்த வகையில் அவருக்கு உதவுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இப்போது எனக்கு பல புதிய ஃபாலோவர்கள் கிடைத்துள்ளனர். இந்த ட்விட்டர் தளத்தின் மூலம் புதிய எதிர்காலத்தை உருவாக்குவதில் உறுதியாக இருக்கிறேன். அந்த எதிர்காலத்திற்கு உங்கள் கருத்துகள் மிகவும் முக்கியமானது. அனைவரும் இணைந்து ட்விட்டர் 2.0 ஐ உருவாக்குவோம்” என்று கூறியுள்ளார்.

வெறுப்பரசியலை வேரறுக்கும் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக வெற்றி!

கிச்சன் கீர்த்தனா: கேப்பேஜ் ரோல் ஸ்நாக்ஸ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share