ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற இருப்பதை அடுத்து திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். அது மட்டுமின்றி திமுக அமைச்சர்களும் அங்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் விரைவில் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
இந்நிலையில், திமுக கூட்டணி கட்சி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று(பிப்ரவரி 19 ) பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர் “திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்காக அதன் சார்பில் இங்கே இருக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்காக வாக்கு சேகரிக்க நான் வந்திருக்கிறேன்.
இன்னொரு சின்னத்திற்காக ஓட்டு கேட்டதாக என்னை யாரும் பார்த்திருக்க மாட்டீர்கள்.
ஆபத்துக் காலத்தில் இதெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. சின்னம், கட்சி, கொடி எல்லாம் தாண்டியது தேசம்.
அதை காக்கவேண்டும் என்று வரும் பொழுது யாருடன் கைகோர்க்க வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும் என்றும் அவரும் பெரியார் பேரன்தான் , நானும் பெரியார் பேரன்தான் என்று கூறினார்.
மேலும், விஸ்வரூபம் என்று ஒரு படம் எடுத்தேன் அப்பொழுது என்னை தடுமாற வைத்து வேடிக்கை பார்த்து சிரித்தார் ஒரு அம்மையார்.
அப்பொழுது கலைஞர் எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பயப்படாதே உனக்கு ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டார்.
வேண்டாம் ஐயா இது நாட்டு பிரச்சனை அல்ல என் பிரச்சனை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அவரிடம் சொன்னேன்.
இந்த கட்சியின் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு என் ஆதரவை கொடுக்க வேண்டியது ஒரு இந்தியனாக என்னுடைய கடமை. கிழக்கிந்திய கம்பெனி முடிந்து இப்போது வடஇந்திய கம்பெனி வந்துவிட்டது. அறம் வெல்லும் என்று பேசினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஈரோடு: தினமும் புழங்கும் பத்து கோடி- பறக்கும் படையா… பார்க்கும் படையா?