WCL 2024: பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்ற இந்திய சாம்பியன்ஸ் அணி!

Published On:

| By Selvam

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களை கொண்டு, 2024 லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது.

கடந்த ஜூலை 3 அன்று துவங்கிய இந்த தொடரில், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் என 6 அணிகள் பங்கேற்றன.

இந்திய அணி சார்பில், சுரேஷ் ரெய்னா, யுவ்ராஜ் சிங், இர்பான் பதான், யூசப் பதான், ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, ஆர்.பி.சிங், ஹர்பஜன் சிங், வினய் குமார் என பல முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் இந்த தொடரில் பங்கேற்றனர்.

இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்களில், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக படுதோல்விகளை சந்தித்த இந்தியா, 2 போட்டிகளில் வென்று புள்ளிப் பட்டியலில் 4வது இடம் பிடித்தது.

இதை தொடர்ந்து, அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா சாம்பியன்ஸ் அணி, அரையிறுதியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது.

அப்போட்டியில், உத்தப்பா (65 ரன்கள்), யுவ்ராஜ் சிங் (59 ரன்கள்), யூசப் பதான் (51 ரன்கள்), இர்பான் பதான் (50 ரன்கள்) ஆகியோரின் அபார ஆட்டத்தால், இந்திய அணி 20 ஓவர்களில் 254 ரன்கள் குவித்தது.

பின், பவன் நேகி (2 விக்கெட்கள்), தவல் குல்கர்னி (2 விக்கெட்கள்) உள்ளிட்டோரின் சிறப்பான பந்துவீச்சால், 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதை தொடர்ந்து, ஜூலை 13 அன்று பிர்மிங்கமில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், இந்திய சாம்பியன்ஸ் அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது.

இப்போட்டியில், முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணிக்கு, இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடியை கொடுத்தனர்.

இதன் காரணமாக, சீரான இடைவேளைகளில் தொடர்ந்து விக்கெட்களை இழந்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்தது.

பாகிஸ்தான் அணிக்கு, அதிகபட்சமாக சோயப் மாலிக் 41 ரன்களை சேர்த்திருந்தார். இந்திய அணிக்காக அனுரீத் சிங் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

இதை தொடர்ந்து, 157 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, ஒரு துவக்க வீரரான ராபின் உத்தப்பா 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

ஆனால், மற்றொரு துவக்க ஆட்டக்காரரான அம்பதி ராயுடு 30 பந்துகளில் 50 ரன்கள் குவித்து அசத்தினார்.

அடுத்துவந்த குர்கீரத் சிங் மான் 34 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, பின் களமிறங்கிய யூசப் பதான் 16 பந்துகளில் 30 ரன்கள் விளாசினார்.

இதன் காரணமாக, இந்திய சாம்பியன்ஸ் அணி 20வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டி, பாகிஸ்தான் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.

அபாரமாக விளையாடி அரைசதம் விளாசிய அம்பதி ராயுடு, இப்போட்டிக்கான ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றார்.

இந்த தொடர் முழுவதும் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி, 7 போட்டிகளில் 221 ரன்கள் குவித்து, 1 விக்கெட்டை எடுத்திருந்த யூசப் பதான், ‘தொடர் நாயகன்’ விருதை வென்றார்.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வறுமை ஒழிப்பில் முதலிடம் பிடித்து தமிழகம் சாதனை!

ஹெல்த் டிப்ஸ்: மனதை இதமாக்க ஈஸி வழிகள் இதோ!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு!

பியூட்டி டிப்ஸ்: பற்களைப் பளபளப்பாக்க 10 வழிகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share