குறிப்பிட்ட இடைவெளி மற்றும் ஒவ்வொரு தொடருக்கும் இடையே கிரிக்கெட் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டு வருகிறது.
அதன்படி தரவரிசை பட்டியல் நேற்று வெளியானது. அதில் ஆடவர் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கான பிரிவில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. டெஸ்ட் பிரிவில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தோல்வியைத் தொடர்ந்து இந்திய அணி 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அதேவேளையில் ஆண்கள் ஒருநாள் அணி பிரிவில் இங்கிலாந்து அணி எட்டாவது இடத்திற்கு சரிந்துள்ளது. இது அந்நாட்டு ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக கருதப்படும் இங்கிலாந்து அணி, ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசையில் 8வது இடத்திற்கு தள்ளப்படுவது இதுவே முதன்முறை.

இதனை விமர்சிக்கும் வகையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் இங்கிலாந்து அணியை விமர்சித்து ட்விட் செய்துள்ளார்.
அதில், “8வது இடத்தில் இங்கிலாந்து அணி… நிச்சயமாக கிரிக்கெட்டின் உத்வேகத்திற்கு எதிரானது. ஐசிசி இதை பரிசீலிக்க வேண்டும்” என நக்கலாக குறிப்பிட்டு அதில் முன்னாள் இங்கிலாந்து அணியின் கேப்டனும், தனது நல்ல நண்பருமான மைக்கேல் வாகனையும் டேக் செய்துள்ளார்.
ஐசிசியின் இந்த தரவரிசை பட்டியலானது, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியின் படுதோல்வியை அடுத்து வெளியானது.
நேற்று நடந்த அப்போட்டியில், முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி வெறும் 131 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 21 ஓவர்களில் இலக்கை எட்டி எளிதாக வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து வென்ற தென்னாப்பிரிக்கா அணி ஐசிசி தரவரிசையில் 6வது இடத்தில் உள்ளது.
