வாக்னர் படைத் தலைவர் பலி: உக்ரைன் மறுப்பு… ரஷ்யாவுக்கு ஆபத்து!

Published On:

| By christopher

புதினுக்கு எதிராக திடீர் கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் குழு தலைவர் பிரிகோஜின் இன்று (ஆகஸ்ட் 24) அதிகாலை விமான விபத்தில் பலியானதாக தகவல் வெளியான நிலையில், வாக்னர் படை ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக உக்ரைன் – ரஷ்யா போர் நடந்து வருகிறது. இதில் ரஷ்யா ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டு வந்தது  62 வயதான யெவ்ஜெனி பிரிகோஜின் தலைமையிலான வாக்னர் படை. உலகளவில் கூலிப்படையாக செயல்பட்டு வந்த இந்த வாக்னர் படை உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷ்யா கைப்பற்ற உதவிகரமாக இருந்து வந்தது.

ஆனால் திடீரென ரஷ்யா ராணுவம் தங்கள் மீதே தாக்குதல் நடத்துவதாக கூறி ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராகக் கடந்த ஜூன் மாதம் ப்ரிகோஜின் தலைமையில் வாக்னர் படை கிளர்ச்சியில் ஈடுபட்டது.

இதனால் ரஷ்யாவில் பதற்றம் ஏற்பட்டது. தலைநகர் மாஸ்கோ உட்பட பல்வேறு பகுதிகளில் ரஷ்ய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

பின் பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ முயற்சியில் நடந்த இந்த சமரசத்தில், வாக்னர் படை வீரர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் ரஷ்யா அறிவித்தது. மேலும் படைத் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜினுக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டு, அவர் பெலாரஸூக்கு நாடு கடத்தப்பட்டார்.

இந்தச் சூழலில் ப்ரிகோஜின் இன்று அதிகாலையில் விமான விபத்தில் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இருந்து சென்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு சென்ற ‘எம்ப்ரேயர் லெகசி 600’ என்ற தனியார் ஜெட் விமானம் ஒன்று மாஸ்கோவிற்கு வடமேற்கே உள்ள டேசர் பகுதியில் திடீரென வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது.

இதில் ஜெட் விமானத்தில் பயணம் செய்த ஏழு பயணிகள் மற்றும் மூன்று பணியாளர்கள் உயிரிழந்தனர்.

ஜெட் விமானத்தில் பயணம் செய்தவர்கள் பெயர் பட்டியலில் வாக்னர் படைத் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் மற்றும் வாக்னர் தலைமை தளபதி டிமிட்ரி உட்கின் பெயரும் உள்ளதாக ரஷ்ய விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் அந்நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தி உள்ளன.

அதிபர் புதினுக்கு எதிராக திடீர் கிளர்ச்சியில் ஈடுபட்ட  இரண்டாவது மாதத்தில் அவர் இப்படி உயிரிழந்துள்ளது பலருக்கும் பல வித சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

வாக்னர் படைத் தலைவர் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில் ஜெட் விமானம் வெடித்து சிதறியதற்கு  உக்ரைனின் ஏவுகணைத் தாக்குதலே காரணம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, ”விமான விபத்துக்கும் உக்ரைனுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், வாக்னர் படைத் தலைவர் கொல்லப்பட்டது தொடர்பாக பேட்டியளித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், “என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்த சம்பவம் குறித்து நான் ஆச்சரியப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

விமான விபத்தில் பலியான யெவ்ஜெனி ப்ரிகோஜின் மற்றும் டிமிட்ரி உட்கின் ஆகியோரின் புகைப்படங்களுக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள தங்களது அமைப்பின் தலைமையகத்திற்கு வெளியே வாக்னர் படை வீரர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ரஷ்யாவுக்கு எச்சரிக்கை!

மேலும் தங்களது தலைவர் ப்ரிகோஜின் மரணத்திற்குப் பழிவாங்கும் வகையில் வாக்னர் வீரர்கள் மாஸ்கோவை நோக்கி அணிவகுத்துச் செல்வதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து வாக்னர் குழு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “வாக்னர் தலைவர் எவ்ஜெனி ப்ரிகோஜின் மரணம் குறித்து பல வதந்திகள் இருக்கிறது.. புதின் தலைமையிலான ரஷ்ய அதிகாரிகள் அவரைக் கொல்ல முயன்றதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். ப்ரிகோஜினின் மரணம் பற்றிய தகவல்கள் உறுதி செய்யப்பட்டால், ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவை நோக்கி நாங்கள் நிச்சயம் இரண்டாவது முறையாக முன்னேறுவோம்.. அவர் உயிருடன் இருப்பதே அனைவருக்கும் நல்லது” என்று கூறப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

இட்லிகடை டூ இஸ்ரோ: சந்திரயான் 3 குழுவில் சாதனை இளைஞர்!

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share