நிறம் மாறும் அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்கள்!

Published On:

| By Balaji

எம்.பி.காசி

தமிழகத்தில் உள்ள அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மீது படித்த வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு நாளுக்கு நாள் நம்பிக்கை குறைந்துவரும் நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகங்கள், பயிற்சி மையமாகவும், தனியார் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்யும் முகவர்கள் போலவும் மாறிவருவது தெரியவந்துள்ளது .

ADVERTISEMENT

எழுதப் படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டமேற்படிப்பு முடித்த தகுதியுள்ள இளைஞர்கள் வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து அரசு வேலைக்கு செல்ல ஏராளமானோர் காத்திருக்கிறார்கள்.

மாற்றுத்திறனாளிக்கான, தொழில்நுட்பக் கல்வி தகுதியுடையவருக்கான வேலைவாய்ப்பு அலுவலகம் எனத் தமிழகம் முழுவதும் 37 வேலைவாய்ப்பு அலுவலகங்கள் இயங்கிவருகிறது.

ADVERTISEMENT

**காத்திருந்து… காத்திருந்து…**

இங்கு 2017 மார்ச் 31ஆம் தேதி வரை 81,30,025 பேர் பதிவு செய்திருந்த நிலையில், வேலை வரும் எனக் காத்திருந்தவர்களுக்கு 2016-2017இல் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக வெறும் 5,802 பேருக்கு மட்டுமே அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

வேலைவாய்ப்பு முகாம் நடத்தியதில் தனியார் நிறுவனங்களில் 20,778 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கி கொடுத்துள்ளார்கள்.

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகத் தனியார் நிறுவனத்திலும், அரசுத் துறையிலும் சென்ற வருடத்தில் மொத்தம் 26,580 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதி 81 லட்சத்து 3445 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து அழைப்பு வராதா எனக் காத்திருக்கிறார்கள். மேலும், ஆண்டுதோறும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.

**வேலைவாய்ப்பு அலுவலகங்களிலேயே வேலை காலி**

இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் உச்சி மாகாளி கூறும்போது, “வேலைவாய்ப்பு அலுவலகத்திலேயே பணியாளர்கள் பற்றாக்குறை 50 சதவிகிதமிருக்கிறது முதலில் அதை நிரப்பிப் பணிச் சுமையைக் குறைக்கட்டும்” என்றார்.

“ஆண்டுதோறும் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படித்தவர்கள் சுமார் பத்து லட்சத்துக்கும் குறையாமல் பதிவுசெய்து வருகிறார்கள். இதுவரையில் தமிழகம் முழுவதுமுள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் சுமார் 90 லட்சம் பேர் பதிவுசெய்து காத்திருக்கிறார்கள்.

அரசுத் துறையில் சுமார் ஒரு லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதை இதுவரையில் நிரப்பாமல் இருக்கிறார்கள். மேலும், ஒவ்வொரு வருடமும் காலியாகும் இடங்களையும் நிரப்புவதில்லை. காரணம், நிதிப் பற்றாக்குறை என்கிறார்கள்.

வேலைவாய்ப்பு அலுவலகம் பயிற்சி மையமாக மாறி முடங்கிபோய் உள்ளது. காலப்போக்கில் வேலைவாய்ப்பு அலுவலகம் ஒன்று இருக்குமா என்றே கேள்விக்குறியாக உள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அதைக் குறைக்க அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

படித்த இளைஞர்களுக்கு வேலையும் இல்லை; வருமானமும் இல்லை என்றால் அவர்கள் பாதை மாறிப்போகும் சூழல் வரும். அதற்கு அரசே காரணமாகக் கூடாது. இளைஞர்கள் பலம் மிக வலிமையானது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார் அவர்.

**தனியாருக்கு வேலைக்கு அனுப்பும் கான்சப்ட்**

வேலைவாய்ப்புக்கான துறையின் அமைச்சர் நிலோபர் கபில் அவர்களிடம் விளக்கம் கேட்க அவரது கைப்பேசிக்கு தொடர்புகொண்டபோது அமைச்சரின் மருமகன் தகவல்களை கேட்டபின் திங்கட்கிழமை கோட்டையில் வந்து பாருங்கள் என்றார்.

அரசு வேலைவாய்ப்பு அலுவலக ஜாயின்ட் டைரக்டர் விஜயகுமார் அவர்களைத் தொடர்புகொண்டு பேசியபோது,

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா என்று பதிவு செய்தவர்களின் குமுறல்களையும் எடுத்துச் சொன்னோம்.

“வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தற்போது 78 லட்சம் பேர் பதிவு செய்துள்ளார்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் லிஸ்ட் பெற்றாலும், தினசரி பேப்பரில் விளம்பரம் கொடுத்து நேரடியாக வருபவர்களையும், வேலைவாய்ப்பு மூலமாக வருபவர்களையும் நேர்காணல் செய்து சம்பந்தப்பட்ட துறையினரே தகுதியானவர்களைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

மேலும், எங்கள் கான்சப்ட் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு அனுப்புவதும் ஊக்குவிப்பதும்தான் அதற்கான முகாம்களை நடத்தி வேலைவாய்ப்புகள் உருவாக்கி வருகிறோம், அரசு வேலைக்குச் செல்ல கோச்சிங் நடத்துகிறோம். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை என்பது எல்லாத் துறையிலும் உள்ளது போலத்தான் அவையெல்லாம் சரியாகிவிடும்” என்றார்.

ஆனால், “தனியார் வேலைவாய்ப்பு அலுவலகமாக மாறிவருகிறது, அரசு வேலைவாய்ப்பு அலுவலகம்” என்கிறார்கள் வேலைவாய்ப்பு அலுவலக ஊழியர்கள்.,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share