தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, புதுச்சேரி மற்றும் வடகிழக்கு மாநிலமான அசாம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் இன்று (ஏப்ரல் 9) சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்த மூன்று மாநிலங்களிலும் சுமார் 5.3 கோடி வாக்காளர்கள் உள்ளனர். காலை முதலே வாக்காளர்கள் உற்சாகமாகத் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். அதிகபட்ச வாக்குப்பதிவை உறுதி செய்ய அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியைப் பொறுத்தவரை, மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 294 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முதல்வர் என். ரங்கசாமி தலைமையிலான ஆளும் என்டிஏ கூட்டணிக்கும், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக களமிறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் , இந்த முறை புதுச்சேரியிலும் போட்டியிடுகிறது. நடிகர் விஜய் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்சி தொடங்கிய நிலையில், இன்று அவரது கட்சி முதல் வாக்குப்பதிவு நாளை எதிர்கொள்கிறது.
கேரள மாநிலத்தில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 985 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் இடது முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாஜக ஆகியவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நடைபெறுகிறது.
அசாம் மாநிலத்தில், ஹிமாந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜகவின் என்டிஏ கூட்டணி ஆளும் நிலையில், மொத்தம் 126 தொகுதிகளில் 789 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். என்டிஏ மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களுக்கும், தமிழகம், மேற்கு வங்கத்துடன் சேர்ந்து வரும் மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
