மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை உட்பட 29 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 10 மணி முதல் எண்ணப்படுகின்றன.
மகாராஷ்டிராவின் மும்பை, தானே, புனே, நாக்பூர் உட்பட 29 மாநகராட்சிகளுக்கு நேற்று ஜனவரி 15-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தம் 50% வாக்குகள் பதிவாகி உள்ளன.
- மாநகராட்சி தேர்தல்களில் 2,869 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்
- மொத்தம் 15,391 பேர் வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர்
- மொத்தம் 3.48 கோடி பேர் வாக்காளர்கள்
- மாநகராட்சி தேர்தலில் 50% வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன
- இன்று காலை 10 மணி முதல் வாக்குகள் எண்ணப்படும்
அண்ணாமலை சர்ச்சை
மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியது பெரும் சர்ச்சையானது. “மும்பை மகாராஷ்டிராவைச் சேர்ந்தது அல்ல, அது ஒரு சர்வதேச நகரம்” என்று அண்ணாமலை பேசியதற்கு மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) தலைவர் ஆதித்ய தாக்கரே உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அண்ணாமலையின் பேச்சு தமிழ் மக்களின் கருத்து அல்ல என்றும், அவர் “தமிழர்களுக்கு துரோகி” என்றும் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’ விமர்சித்திருந்தது. இதற்குப் பதிலளித்த அண்ணாமலை, அரசியல் மிரட்டல்களுக்கு தான் அஞ்ச மாட்டேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
