சசிகலா காரை மாற்றியது ஏன்?: தினகரன்

Published On:

| By Balaji

பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருக்கும் சசிகலா, தமிழக எல்லையில் காரை மாற்றியது குறித்து டிடிவி தினகரன் விளக்கமளித்துள்ளார்.

பெங்களூரு சிறையிலிருந்து கடந்த ஜனவரி 27ஆம் தேதி விடுதலையான சசிகலா, கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஜனவரி 31ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவர்களின் அறிவுரைப்படி, பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் ஒரு வாரம் தங்கியிருந்த அவர் இன்று புறப்பட்டு சென்னை வந்துகொண்டிருக்கிறார்.

ADVERTISEMENT

சசிகலாவின் வருகையால் சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முன்னதாக பெங்களூருவிலிருந்து கிளம்பும் போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். காலை 7.45 மணிக்கு பெங்களூரு சொகுசு விடுதியிலிருந்து சசிகலா தமிழகம் புறப்பட்ட நிலையில், அவரது காரைச் சுற்றி அமமுகவினர் மற்றும் சசிகலாவின் ஆதரவாளர்களின் வாகனங்கள் அணி வகுத்து வருகின்றன.

ADVERTISEMENT

இதனிடையே சசிகலா காரில் அதிமுகவின் கொடியை பயன்படுத்தக் கூடாது என முதல்வர் உட்பட அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர். டிஜிபியிடமும் புகார் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று சசிகலா பெங்களூருவிலிருந்து வந்த காரில் அதிமுகவின் கொடி பொருத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதிமுகவின் ஒன்றிய கவுன்சிலர் சம்பங்கி ஒசூர் பகுதியிலும், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் ஒசூர் சிப்காட் பகுதியிலும் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதனிடையே கிருஷ்ணகிரி ஏடிஎஸ்பி சக்திவேல், அதிமுக கொடியை அகற்றுமாறு நோட்டீஸ் கொடுத்திருக்கிறார். ஆனால் சசிகலா தரப்பினர் கொடியை அகற்ற மறுத்துவிட்டனர். இதுதொடர்பாக பேட்டி அளித்துள்ள சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், “சசிகலா இன்னும் அதிமுக உறுப்பினராகத் தான் உள்ளார். எனவே அவர் அதிமுக கொடியை பயன்படுத்த உரிமை உள்ளது. அவர் காரில் கொடி கட்டிக் கொண்டு வருவதை யாரும் தடுக்க முடியாது. சசிகலா தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் கொடி கட்டக்கூடாது என்று சொல்ல முடியாது. இந்த பிரச்சினையைச் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தசூழலில், ஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு கொடியை கழட்டாமல் சசிகலா காரை அனுமதிக்கக் கூடாது என்று மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே தமிழக எல்லை பகுதியில் தான் பயணித்து வந்த காரை மாற்றியுள்ளார் சசிகலா.

இந்நிலையில் சசிகலா கார் மாற்றப்பட்டது குறித்து பேசிய டிடிவி தினகரன், “அதிமுக ஒன்றிய கவுன்சிலர் சம்பங்கியின் காரில்தான் சசிகலா மாறி செல்கிறார். வரவேற்பு கொடுக்க வந்த அதிமுக நிர்வாகியின் காரில்தான் செல்கிறார். அந்த நிர்வாகியும் காரில்தான் இருக்கிறார் என்று எனக்கு தகவல் வந்தது” என்றார்.

மேலும், காவல்துறை பதில் சொல்ல வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதாகத் தெரிவித்த தினகரன்,

“காரில் சிறு கோளாறு ஏற்பட்டதால் தான் சசிகலா தனது காரை மாற்றினார். சென்னை சென்றதும் ராமாபுரம் எம்ஜிஆர் தோட்டத்துக்குச் செல்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

*-வணங்காமுடி*

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share