விஷால் – ப்ரியா பவானி சங்கர் நடிக்க ஹரி இயக்கத்தில் விஷால் 34 என பெயரிடப்பட்டிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று (ஜூலை 17) துவங்கியது.
‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ படங்களின் வெற்றிக்குப் பிறகு, நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி ஆகியோர் மூன்றாவது முறையாக இணையும் இந்த புதிய படத்தினை,
ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம், ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் இணைந்து தயாரிக்கின்றனர்.
இது விஷாலின் 34 வது படமாகும். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில் தற்போதைக்கு “விஷால் – 34” என அழைக்கப்பட்டு வருகிறது. நடிகை பிரியா பவானி சங்கர் முதல்முறையாக விஷாலுடன் ஜோடியாக இணைகிறார்.

தனது முதல் படமான தமிழ் படம் துவங்கி, அனைத்து படங்களிலும் கதையம்சம், உறவுமுறை, காமெடி, விறுவிறுப்பான ஆக்ஷன் என ரசிகர்களுக்கு தொடர்ந்து விருந்து படைத்து வரும் இயக்குநர் ஹரி,
இப்படத்தில் அனைத்து தரப்பினரையும் கவரும் விதத்தில், அனைவரும் தங்கள் வாழ்வில் தங்களைப் பாதித்த, கடந்து வந்த சம்பவங்களை நினைவு கொள்ளும் வகையில் அழுத்தமான திரைக்கதையை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது
இப்படம் குறித்து நடிகர் விஷால் கூறுகையில்,
“ என் திரை வாழ்க்கையில் திருப்புமுனை தந்தவர் இயக்குநர் ஹரி. அவருடன் இணைந்த தாமிரபரணி மற்றும் பூஜை படங்களைப்போல இந்தப்படமும் அழுத்தமான கதை, உணர்வுப்பூர்வமான காட்சியமைப்புகளுடன், ஆக்சனும் கலந்து அனைவரும் ரசிக்கும் படி இருக்கும். கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றிப்படமாக இப்படம் அமையும்” என்றார்.
இசையுலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி, புஷ்பா படம் மூலம் 5 மொழிகளிலும் ஹிட் தந்த இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், “ஆறு, வேங்கை, சாமி, சிங்கம் 1, 2, ஆகிய படங்களின் தொடர் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் ஹரியுடன் மீண்டும் இணைகிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பையனூரில் உள்ள பெப்ஸிக்கு சொந்தமான அரங்கில், ஸ்டன்ட் மாஸ்டர் திலிப் சுப்பராயனின் அதிரடி சண்டை காட்சிகளுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கில் துவங்கியது.
மேலும் சென்னையை அடுத்து, தமிழ்நாட்டின் தென் பகுதிகள் தூத்துக்குடி, காரைக்குடி வேலூர் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து படமாக்கப்படவுள்ளது.
படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் படம் குறித்த தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இராமானுஜம்