ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியைத் தொடர்ந்து, இன்று (அக்டோபர் 23) நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் விராட் கோலி டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
பெர்த் மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 8 பந்துகளை சந்தித்த விராட் கோலி, மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார்.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர்.
எனினும் மெதுவாக ஆடி வந்த இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 6வது ஓவரில் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்ததார்.
தொடர்ந்து, விராட் கோலி களமிறங்கினார். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் சேவியர் பார்ட்லெட் முதல் மூன்று பந்துகளை எதிர்கொண்ட அவர் ரன்கள் எடுக்கவில்லை. சேவியர் வீசிய நான்காவது பந்து, லெக் ஸ்டம்பிற்கு நேராக வேகமாக உள்ளே வந்தது.
அந்த பந்தை ஃபிலிக் செய்ய முயன்ற கோலி, லைனைத் தவறவிட, அது நேராக அவரது காலில் தாக்கியதை அடுத்து நடுவர் உடனடியாக எல்பிடபிள்யூ (LBW) முறையில் அவுட் வழங்கினார்.
டிஆர்எஸ் (DRS) முறையைக் கோராமல், வெளியேறிய கோலி மீண்டு டக் அவுட் ஆனது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஒரு சோகமான சாதனை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அடுத்தடுத்து இரண்டு ஒருநாள் போட்டிகளில் டக் அவுட் ஆனது, விராட் கோலியின் 17 ஆண்டு கால ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது மோசமான சாதனையாக பார்க்கப்படுகிறது.
இந்திய அணி இந்தத் தொடரில் ஏற்கெனவே 0-1 எனப் பின்தங்கியுள்ள நிலையில், இரண்டாவது போட்டியிலும் கேப்டன் கில் மற்றும் கோலி ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தது, இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.
ரோகித் அபார சாதனை!
அதே வேளையில் துவக்க வீரராக களமிறங்கி அரைசதம் அடித்து விளையாடி வரும் ரோகித் சர்மா அபார சாதனை படைத்துள்ளார்.
இன்றைய போட்டியில் மிட்செல் ஸ்டார்க்கை மூன்றாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடித்து 5 ரன்கள் குவித்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரோஹித் ஷர்மா.
