ஒரு பேட்ஸ்மேனாக என்னை நிரூபிப்பதற்கு ஒரு நாள் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உலக கோப்பை நடைபெற உள்ளதால் அதற்கு ஏற்றார்போல ஆசிய கோப்பை தொடர் 50 ஓவர் போட்டிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான், நேபாளம் அணிகள் மோதுகின்றன.
இந்தநிலையில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் சூழலுக்கு தகுந்தபடி அணியின் வெற்றிக்காக விளையாட வேண்டும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விராட் கோலி கூறும்போது, “ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவது எனக்கு பிடிக்கும். உங்களுடைய ஆட்டத்திறனை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தான் சரியாக கணிக்கும்.
இந்த போட்டி என்பது சூழலுக்கு தகுந்தபடி விளையாடுவது, தனித்தன்மையுடன் விளையாடுவது என பல நிலைகளை கொண்டது. ஒரு பேட்ஸ்மேனாக என்னை நிரூபிப்பதற்கு ஒரு நாள் கிரிக்கெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஒரு நாள் போட்டியில் விளையாடுவது சவாலாகவும் அணிக்கு வெற்றியை தேடி தரும் சூழலில் விளையாடுவது ஆர்வத்தை தருவதாகவும் உள்ளது. இதனை என்னுடைய போட்டிகளில் தொடர்ச்சியாக முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
செல்வம்