ஒரே மாதிரியான கதையமைப்பில் இரு வேறு படைப்புகள் உருவாவது புதிதல்ல. படைப்புரீதியாகப் பலரைச் சந்தித்து, கதையைப் பகிர்ந்து, படப்பிடிப்பு தளத்தை எட்டி, முழுமையாகத் தயாராவதற்குச் சில காலம் ஆகும்.
அந்தச் செயல்முறையில் தாமதம் ஏற்படும்போது, அந்த கதை குறித்தோ, அதன் சாராம்சம் குறித்தோ தகவல்கள் கசிந்து, அதே தொனியில் வேறு படைப்புகள் உருவாவது சினிமா தோன்றிய காலம் தொட்டு நிகழ்ந்து வருகிறது. Viraatapalem PC Meena Reporting
சில நேரங்களில் சம்பந்தப்பட்ட கதாசிரியர், இயக்குனரைத் தொடர்புகொண்டு அல்லது சந்தித்து பேச்சு நடத்தியபிறகு, அவர்கள் முன்வைக்கிற கதையை நிராகரித்துவிடுவதாகச் சொல்லிவிட்டு, அதனை அப்படியே வேறொரு குழுவைக் கொண்டு உருவாக்குவதும் நிகழக்கூடும். கடந்த காலங்களில் சில படைப்புகள் அத்தகைய புகார்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. Viraatapalem PC Meena Reporting

இதில் இரண்டாவது வகைக்கு ஆளாகியிருக்கிறது ஜீ5 தளத்தில் வரும் ஜூன் 27-ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் ’விராடபாலம்: பிசி மீனா ரிப்போர்ட்டிங்’ தெலுங்கு வெப்சீரிஸ்.
வினோத நம்பிக்கைகளைக் கொண்ட ஒரு கிராமத்திற்கு வரும் ஒரு பெண் காவலரின் வாழ்வனுபவங்களை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கிற இப்படைப்பு, தொண்ணூறுகளில் நிகழ்வதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிதாமகன் மகாதேவன், அபிஞ்யா, சரண் லக்கராஜு, லாவண்யா சஹுகரா, ராமராஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த வெப்சீரிஸின் கதையை திவ்யா தேஜஸ்வி பேரா எழுத, பொலுரு கிருஷ்ணா இதனை இயக்கியிருக்கிறார்.
ஆனால், இடிவி வின்னில் வெளியாகவிருக்கும் ‘கான்ஸ்டபிள் கனகம்’ வெப்சீரிஸ் குழு, தங்களது படைப்பைக் காப்பியடித்து ’விராடபாலம்: பிசி மீனா ரிப்போர்ட்டிங்’ உருவாக்கப்பட்டிருப்பதாகப் புகார் தெரிவித்திருக்கிறது.
’பிகில்’, ‘96’ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்த வர்ஷா பொல்லம்மா நடிப்பில் ‘கான்ஸ்டபிள் கனகம்’மை இயக்குனர் பிரசாந்த் குமார் திம்மலா உருவாக்கி வருகிறார்.
ஜீ5 தளத்தில் தனது திரைக்கதையைச் சமர்ப்பித்ததாகவும், தீடீரென்று அதனை நிராகரிப்பதாகத் தனக்குத் தகவல் சொல்லப்பட்டதாகவும், அதன்பிறகு இடிவி வின்னை நாடி ‘கான்ஸ்டபிள் கனகம்’மை உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
திரைக்கதையைப் பகிர்ந்துகொள்வதற்காகத் தான் அணுகியவர்கள் இப்போதும் அங்கு பணியில் இருப்பதாகவும், அவர்களிடம் அதனைச் சமர்ப்பித்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
தனது திரைக்கதையிலுள்ள பலவற்றை அனுமதியின்றிப் பயன்படுத்தியிருப்பதாகப் பிரசாந்த் தெரிவித்திருப்பது சர்ச்சையான நிலையில், அறிவுசார் உரிமையைக் காக்கும் வகையில் சட்டப்படி இவ்விவகாரத்தை அணுகப் போவதாக ’கான்ஸ்டபிள் கனகம்’ குழு தெரிவித்திருக்கிறது. Viraatapalem PC Meena Reporting



