மகாராஷ்டிராவில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, பாஜக பொதுச்செயலாளர் வினோத் டாவ்டே மீது இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று (நவம்பர் 19) வழக்குப்பதிவு செய்துள்ளது.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் நாளை(நவம்பர் 20) நடைபெறவுள்ளது. சிவ சேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டாக பிரிந்த பிறகு நடக்கும் தேர்தல் என்பதால், நாடே இந்த தேர்தலை உற்று கவனித்து வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிரா பால்கர் மாவட்டத்தில் ‘விவாந்தா’ ஹோட்டலில் பாஜக போதுச் செயலாளர் வினோத் டாவ்டே மற்றும் நலசோபாரா சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராஜன் நாயக் ஆகியோரை பஹுஜன் விகாஸ் அகாதி கட்சி சூழ்ந்து கோஷம் போடும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் இன்று வெளியானது.
அதில் பஹுஜன் விகாஸ் அகாதி கட்சியினர் அங்குக் கிடைத்ததாகச் சொல்லப்படும் பணத்தைக் கையில் ஆட்டியபடி, வினோத் டாவ்டேவை சோர்! சோர்! (திருடன்! திருடன்!) என்று கூச்சலிடுவது தெரிகிறது.
இது தொடர்பாக பஹுஜன் விகாஸ் அகாதி கட்சி நிர்வாகிகள் கூறுகையில், வினோஜ் டாவ்டே பால்கர் மாவட்ட வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றார் எனவும், அவரிடம் ரூ.5 கோடி இருந்ததாகவும் அக்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் அக்கட்சித் தலைவர் ஹிதேந்திர தாகூர், வினோத் டாவ்டேவிடமிருந்து இரண்டு டயரிகள் இருந்தாக சொல்கிறார்.
இதற்கிடையில் போலீஸார் வினோத் தாகூரை அந்த இடத்திலிருந்து அழைத்துச் சென்றனர். மேலும் அந்த ஹோட்டலுக்கு சீலும் வைத்துள்ளனர்.

விசாரணை நடத்தட்டும்!
இது தொடர்பாக வினோத் டாவ்டே பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் “நானும் மற்ற கட்சிக்காரர்களும், நாளை நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்குப் பின், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எப்படி சீல் வைக்கப்படும்,
அதில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால், எப்படி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்பது என்று பேசிக்கொண்டிருந்தோம்.
நான் 40 வருடங்களாக பாஜகவில் இருக்கிறேன். அங்கு ஹோட்டலில் சிசிடிவி இருந்தது. அதனை போலீஸ் பார்க்கட்டும். விசாரணை நடத்தட்டும்” என்று கூறினார்.

இதற்கிடையே இந்தியத் தேர்தல் ஆணையம் வினோத் டாவ்டே மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாகச் சிவ சேனா(உபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே “தேர்தல் ஆணையம் வினோத் டாவடே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது மகாராஷ்டிரா மக்கள் எடுப்பார்கள்” என்று கூறியுள்ளார்.
மோடிக்கு ராகுல் கேள்வி!
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் ” மோடிஜி இந்த ஐந்து கோடி ரூபாய் யாருடைய ‘லாக்கரில்’ இருந்து வந்தது? டெம்போ மூலம் யார் உங்களுக்கு இதை அனுப்பினார்கள்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

முன்னதாக கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அதானி மற்றும் அம்பானி ராகுல் காந்திக்கு டெம்போ மூலம் கருப்பு பணத்தை அனுப்புகிறார்கள் என்று நரேந்திர மோடி ராகுல் காந்தியை விமர்சித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
‘இந்தியா இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபி நடத்த முடியாது’ : பாகிஸ்தானிடத்தில் ஐசிசி உறுதி!
கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள் : திருவாதிரை!
தீ விபத்தில் 7 குழந்தைகளை மீட்ட ஹீரோவுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Comments are closed.