ஒலிம்பிக்கில் அலட்சியம் காரணமாக தகுதி இழப்பை சந்தித்து விட்டு , பிரதமர் மோடி உள்ளிட்டோரை குறை கூறுவது எந்தவிதத்தில் நியாயம் என்று வினேசுக்கு யோகேஷ்வர் தத் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாரீஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ பெண்களுக்கான மல்யுத்த பிரிவில் மிகச் சிறப்பாக விளையாடிய வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதிப் போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கூடுதல் எடை காரணமாக வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பிறகு , மல்யுத்த போட்டிகளில் இருந்தே ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்தார்.
நாடு திரும்பிய வினேஷ், இந்திய ஒலிம்பிக் சங்கத்தையும் அதன் தலைவரான பி.டி. உஷாவையும் குறை கூறி வந்தார். இப்போது, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து ஹரியானா தேர்தலில் அவர் போட்டியிடுகிறார்.
இதற்கிடையே சக மல்யுத்த வீரரும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவருமான யோகேஷ்வர் தத் ஆஜ் தக் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் காட்டமாக வினேஷ் மீது சில குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அவர் கூறியதாவது, பதக்கத்தை இழந்ததற்காக நாட்டு மக்களிடம் வினேஷ் போகத் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் . ஒலிம்பிக் விதிமுறைப்படி ஒரு கிராம் அதிகமாக இருந்தாலும் தகுதி நீக்கம்தான் செய்வார்கள். இது எல்லோருக்கும் தெரியும்.
தன் மீதுள்ள குற்றத்தை மறைத்து விட்டு, சதி அப்படி இப்படியெல்லாம் வினேஷ் போகத் பேசுகிறார். நாட்டின் பிரதமர் மோடி மீதும் குற்றம் சொன்னார். இதுவெல்லாம் எனக்கு வியப்பை அளிக்கிறது. இந்தியாவுக்குக் கிடைக்க வேண்டிய பதக்கத்தைத் தவற விட்ட போதிலும் அவர் தவறான கருத்துகளைப் பரப்பினார். வினேஷின் இடத்தில் நான் இருந்திருந்தால், நிச்சயம் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டிருப்பேன்” என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
சிக்கிய வலுவான ஆதாரங்கள் : கொச்சியில் மறுப்பு, டெல்லிக்கு ஓட்டம் பிடித்த நடிகர் சித்திக்