விக்கிரவாண்டி தொகுதியில் உண்மையான வெற்றி பாமகவுக்குதான் கிடைத்திருக்கிறது என்று அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று (ஜூலை 13) எண்ணப்பட்டன.
இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.
பிற்பகல் 03:35 நிலவரப்படி, தேர்தல் ஆணைய இணையதளத்தில் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகளை பெற்றிருப்பதாகவும், பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,296 வாக்குகளை பெற்றிருப்பதாகவும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 10,602 வாக்குகள் பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் திமுக பணம் கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இன்று (ஜூலை 13) அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ஆளுங்கட்சி அதன் அத்துமீறலை தொடங்கி விட்டது.
முதலமைச்சர் ஸ்டாலின் தவிர மீதமுள்ள 33 அமைச்சர்களும், 125க்கும் கூடுதலான சட்டப்பேரவை உறுப்பினர்களும் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு பணத்தையும், பரிசுப் பொருட்களையும் வெள்ளமாக பாயவிட்டனர்.

ஒவ்வொரு நாளும் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்து அரிசி மூட்டை, மளிகை சாமான், வேட்டி – சேலை, தங்க மூக்குத்தி, தினமும் ரூ.300 முதல் ரூ.500 வரை பணம் என வாரி இறைக்கப்பட்டது. மது ஆறாக பாய்ந்தது. ஊருக்கு ஊர் பிரியாணி சமைத்து வாக்காளர்களுக்கு விருந்து வைத்தனர்.
நிறைவாக ஒவ்வொரு வாக்குக்கும் ரூ.3000 வரை பணம் வழங்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு ஓட்டுக்கும் ரூ.10,000 வரை தி.மு.க. வழங்கியது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தி.மு.க.வின் வெற்றி என்பது அரிசி மூட்டைகளுக்கு கிடைத்த வெற்றி, டோக்கனுக்கு கிடைத்த வெற்றி, வேட்டி & சேலைகளுக்கு கிடைத்த வெற்றி, தங்க மூக்குத்திகளுக்கு கிடைத்த வெற்றி, மளிகை சாமான்களுக்கு கிடைத்த வெற்றி, வெள்ளமாக பாய விடப்பட்ட மதுவுக்கு கிடைத்த வெற்றி, தி.மு.க. சார்பில் செலவழிக்கப்பட்ட ரூ.250 கோடிக்கு கிடைத்த வெற்றி.
இவை அனைத்துக்கும் மேலாக விக்கிரவாண்டி தொகுதிக்கான தேர்தல் அதிகாரிகளும், காவல் அதிகாரிகளும் தி.மு.க.வின் தொண்டர் அணியினராகவே மாறி, தி.மு.க.வின் தேர்தல் விதிமீறல்களை வேடிக்கைப் பார்த்தது மட்டுமின்றி, அனைத்து அத்துமீறல்களுக்கும் துணை நின்றார்கள். அந்த வகையில் இது தி.மு.க.வும், தேர்தல் அதிகாரிகளும், காவல்துறையினரும் அமைத்திருந்த கள்ளக் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி.
மறுபுறத்தில் பாமக மக்களை மட்டுமே நம்பி களத்தில் இறங்கியது. பாட்டாளி மக்கள் கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் வீடு வீடாக சென்று மக்களைச் சந்தித்து தி.மு.க. அரசின் மக்கள்விரோத செயல்பாடுகள் குறித்தும்,
சமூக அநீதி குறித்தும் மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தனர். அதைக் கூட தடுக்கும் வகையில் மக்களை அழைத்துச் சென்று பட்டிகளில் அடைத்து வைத்தனர்.
இப்படிபட்ட நிலையிலும் பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,261 வாக்குகளை குவித்திருக்கிறார். இது 2024 மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளருக்கு கிடைத்த 32,198 வாக்குகளை விட 75 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுங்கட்சி சார்பில் பணமும், பரிசுகளும் வாரி இறைக்கப்பட்ட போதிலும், அவற்றை புறக்கணித்து விட்டு 56,261 வாக்காளர்கள் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்திருப்பது ஜனநாயகத்திற்கும், பா.ம.க.வின் மக்கள் பணிக்கும் கிடைத்த வெற்றி ஆகும்.
அந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதியில் உண்மையான வெற்றி பாட்டாளி மக்கள் கட்சிக்குதான் கிடைத்திருக்கிறது. பணத்தை வாரி இறைத்து தி.மு.க. பெற்ற வெற்றி தற்காலிகமானது. 2026 தேர்தலில் பா.ம.க. மாபெரும் வெற்றியை பெறுவது உறுதி” என்று தெரிவித்துள்ளார் ராமதாஸ்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா